அன்று சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம்.. இன்று சேம்சைடு கோல்.. ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு என்ன?
சென்னை: கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலாவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்டதாக ஓபிஎஸ் அவரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய நிலையில் இன்று அவருக்கே ஆதரவு அளிக்கும் வகையிலான கருத்தை ஓபிஎஸ் கூறியதால் சசிகலா விவகாரத்தில் அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Recommended Video
2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல பாதிப்பால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்தார். இதையடுத்து ஏற்கெனவே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை செல்ல நேரிட்ட போது தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஓ. பன்னீர் செல்வத்தை முதல்வராக அமர்த்திவிட்டு சிறைக்கு சென்றார் ஜெயலலிதா.
அதன்படி ஜெயலலிதா இறந்த பின்னர் ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றார். அப்போது அவர் தனது பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அழுதபடியே பதவியேற்றார். இதையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை பொதுக் குழு கூடி தேர்வு செய்த நிலையில் அவரை முதல்வராக்கவும் சில நிர்வாகிகள் விரும்பினர்.
அதிமுகவில் சசிகலா இணைப்பு? தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
முதல்வர்
இதையடுத்து சசிகலாவும் தான் முதல்வராக வேண்டி ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு "அறிவுறுத்தியதாக" சொல்லப்படுகிறது. இதையடுத்து முதலில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறிய ஓபிஎஸ், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார்.
மெரினாவில் ஜெ. நினைவிடம்
இதையடுத்து இரு தினங்கள் கழித்து அதே ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி மாலை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ பன்னீர் செல்வம் வந்தார். அங்கு யாரிடமும் எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்துவிட்டார். விஷயத்தை அறிந்த செய்தியாளர்கள் மெரினாவுக்குள் குவிந்தனர். அப்போது சிறிது நேரம் கழித்து கண்களை திறந்த ஓபிஎஸ், சோகமே உருவாய் செய்தியாளர்கள் சந்தித்தார்.
முதல்வர் பதவி ராஜினாமா
அப்போது சசிகலாவின் நிர்பந்தத்தால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்றும் சசிகலாவை பற்றி 10 சதவீதம் கூறியிருக்கிறேன். தேவைப்படும்போது மீதமுள்ள 90 சதவீதம் கூறுவேன் என்று கூறி பரபரப்பை கிளப்பினார் ஓபிஎஸ். அதன்பின்னர் சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இரட்டை இலை சின்னம் முடக்கம்
இதையடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் அதை மீட்டெடுக்க இரு அணிகளும் ஒன்றிய வேண்டும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதையேதான் அதிமுகவின் மூத்த வழக்கறிஞர்களும் ஆலோசனை வழங்கினர். இரு அணிகளும் ஒன்றிணைய ஓபிஎஸ் இரு கண்டிஷன்களை போட்டார். அதில் ஒன்று சசிகலா குடும்பத்தினருக்கு அதிமுகவில் இடம் கொடுக்கக் கூடாது. மற்றொன்று ஜெயலலிதாவின் இறப்புக்கு விசாரணை ஆணையம் ஏற்படுத்துதல்.
இரு பதவிகள்
இந்த இரு நிபந்தனைகளையும் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஒப்புக் கொண்டதை அடுத்து இரு அணிகளும் இணைந்தன. இதில் ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து செயற்குழு கூட்டம் கூடி பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கிய அதிமுகவினர் இரு புதிய பதவிகளை உருவாக்கினர். அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகளை உருவாக்கி அதில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இரட்டை தலைமை
அதிமுக என்ற கட்சி அன்று முதல் இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த நிலையில் தேர்தல் தோல்வி, தென் மாவட்டத்தினருக்கான முக்கியத்துவமின்மை, கட்சியில் அணிகள், உள்ளிட்டவற்றை காரணம் காட்டி அதிமுகவை தன் தலைமையின் கீழ் அதாவது ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறார்.
சசிகலாவின் நகர்வுகள்
ஆனால் அதிமுகவை மீட்க சசிகலாவின் நகர்வுகளுக்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சசிகலாவும் ஓபிஎஸ்ஸும் ஒரே சமூகத்தினர் என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, கொறடா உள்ளிட்டவை தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு கிடைக்காத அதிருப்தியில் சசிகலாவுக்கு ஆதரவாகவே ஓபிஎஸ் செயல்படுவார் என கூறப்பட்டது.
மதுரையில் பேட்டி
இந்த நிலையில் சசிகலாவை அதிமுக ஏற்குமா என மதுரையில் ஓபிஎஸ்ஸுக்கு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் அதிமுக தொண்டர்களின் இயக்கம்; இரட்டை தலைமையின் கீழ் கட்சி சிறப்பாக செயல்படுகிறது, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றார். ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமியும் சில நிர்வாகிகளும் சசிகலாவுக்கு நோ சொல்லி வருகிறார்கள்.
ஓபிஎஸ் முடிவு என்ன?
மறுபக்கம் ஓபிஎஸ்ஸோ ஆலோசனை செய்து முடிவு எடுப்போம் என கூறியுள்ளார். இரு தலைமைகளின் இரு வேறு கருத்துகளால் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். மேலும் அன்று சசிகலாவால் ஓபிஎஸ்ஸிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு அவர் தர்மயுத்தம் நடத்திய நிலையில் அன்று எதிர்த்த சசிகலாவுக்கு இன்று ஆதரவு தெரிவிக்கும் கருத்தை ஓபிஎஸ் கூறியதன் மூலம் அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை தொண்டர்கள் புரிந்து கொண்டுள்ளனர். மேலும் கட்சியில் மூத்த நிர்வாகிகள் சிலரது குறுக்கீடால் தென் மாவட்டத்தினரின் வாய்ஸ் எடுபடுவதில்லை என்பதால் ஓபிஎஸ் சசிகலாவுக்கு பச்சை கொடி காட்டியுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. மேலும் தென் மாவட்ட வாக்குகளை கவர சசிகலா அங்கிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதையும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதையும் கூட்டி கழித்து பார்த்தால் எல்லாம் புரிகிறது!