ஓங்கும் கை.. ஓபிஎஸ்ஸின் ‘பரபர’ மூவ்.. சசிகலாவுக்கு காத்திருக்கும் ‘முக்கிய பதவி’ இதுவா?
சென்னை : சசிகலாவின் ஆதரவுக் கரம் ஓ.பன்னீர்செல்வத்தை நோக்கி நீண்டிருப்பதாக வெளியாகி வரும் தகவலால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் சசிகலாவுக்கு என்ன பதவி வழங்குவார் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
சமீப சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரோடு பேசி வருவதாக கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா, ஓபிஎஸ் தரப்பை ஆதரிக்கும் முடிவை எடுக்கும் பட்சத்தில், அவருக்கு ஓபிஎஸ் என்ன பதவியை வழங்குவார் என்று இப்போதே சூடான விவாதங்கள் கிளம்பியுள்ளன. சசிகலா தான் இப்போதும் வகிப்பதாகக் கூறி வரும் பொதுச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படாது என்றே தெரிகிறது.

ஈபிஎஸ் ஓபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஏற்பட்ட ஈபிஎஸ் ஓபிஎஸ் மோதலால் இப்போது கட்சி யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்றே தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் அறிவித்தார். எதிர் தரப்பினரை கட்சியை விட்டு நீக்கும் படலம் பல கட்டங்களாக நடந்து வருகிறது.

ஈபிஎஸ் தரப்புக்கு நெருக்கடி
எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழு தொடர்பாக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பண்ருட்டி ராமச்சந்திரன்
இதற்கிடையே மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி, யார் முழுமையாக கட்சியை கைப்பற்றப் போகிறார்கள் என்ற பரபரப்பு நிலவி வரும் இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்து வரும் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூவர் கூட்டணி
எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் குடைச்சல் கொடுக்கும் வகையில் சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்து வருவதன் மூலம் கிட்டத்தட்ட இந்தத் திட்டம் உறுதியாகியுள்ளது. மேலும், தேனி சென்ற அமமுக பொதுச்செயலாளர்.டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் சையது கான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதும் இந்த விவகாரத்தை பெரிதாக்கியது.

நெருக்கம் காட்டுவதால் பரபரப்பு
சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நெருக்கம் காட்டுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பை நடத்துவதற்கான வேலைகளில் திரைமறைவில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி கொடுக்க சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் கைகோர்ப்பாரா என்பதை அரசியல் அரங்கில் சூடான விவாதமாக உள்ளது.

பதவிகளுக்கு போட்டி
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கை ஓங்கி வருவதுபோன்ற தோற்றம் எழுந்துள்ளதால், ஓபிஎஸ் அணியில் முக்கிய பதவிகளைப் பிடிக்க பலரும் போட்டி போட்டு வருகிறார்கள். இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை நியமித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை இன்னும் யாருக்கும் ஒதுக்கவில்லை. இந்நிலையில், சசிகலா ஓபிஎஸ் தரப்போடு இணைந்தால், அவருக்கு என்ன பதவி ஒதுக்கப்படும் என்ற பேச்சுகளும் கிளம்பியுள்ளன.

பொதுச் செயலாளர்?
தானே அதிமுகவின் பொதுச் செயலாளர் என இப்போதும் சொல்லி வருகிறார் சசிகலா. பொதுச் செயலாளராக இருந்த அவரை ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்தே பதவியில் இருந்து நீக்கினர். பின்னர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கும் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக திட்டம் போட்டு பொதுக்குழுவைக் கூட்டி இடைக்கால பொதுச் செயலாளராகவும் ஆகிவிட்டார். ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியில் வேறு யாரும் வரக்கூடாது என்றே இப்போதும் கூறி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.

அவைத்தலைவர் பதவி?
இப்போது சசிகலா ஓபிஎஸ் பக்கம் இணைந்தால், அவருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படாது என்றே தெரிகிறது. ஆனால், அவைத் தலைவர் பதவி சசிகலாவுக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே அணியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு பதவிகளை கொடுத்த பின்னரே சசிகலாவின் நியமனம் பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இருப்பவர்களின் அதிருப்தியை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications