Tamil Nadu SIR: தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! நீக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியது என்ன?
சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் அதில் பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் விளக்கியுள்ளார். நீக்கப்பட்ட 97 லட்சம் பேரில் 66 லட்சம் பேர் இறந்தவர்கள், 3 லட்சம் பேர் இரட்டை பதிவுகள் கொண்டவர்கள். இவர்களை தவிர மீதமுள்ள 28 லட்சம் பேர் என்ன செய்ய வேண்டும், மீண்டும் பட்டியலில் இணைவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14 ஆம் தேதியுடன் முடிவடைந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் மாவட்ட வாரியாக எத்தனை பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்கிறது, எத்தனை பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்பது குறித்தெல்லாம் மாவ்ட ஆட்சியர்கள் அரசியல் க்சியினர் முன்பு வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 25,79,676 பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளன. எஸ்ஐஆருக்கு முன்பு 40,04,694 பேராக இருந்த வாக்காளர்கள் தற்போது குறைந்துள்ளது. அந்த 40 லட்சத்தில், 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்திற்குள்பட்டவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இனி படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர்களாக சேர ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு தொடர்பாக வாரம் இருமுறை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் எஸ்ஐஆருக்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது எஸ்ஐஆருக்கு பின் 5.43 கோடி (5,43,76,755) வாக்காளர்கள் உள்ளனர். 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பெண் வாக்காளர்கள் 2,77,06,332, ஆண் வாக்காளர்கள் 2,66,63,233, மூன்றாம் பாலினத்தவர் 7,191, மாற்றுத்திறனாளிகள் 4,19,355 வாக்காளர்கள் உள்ளனர்.
எஸ்ஐஆர் மூலம் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 66,44,881, இரட்டை பதிவு 3,39,278 என தெரியவந்தது, பட்டியலில் இடம் பெறாதவர்கள் பிஎல்ஓ, இஆர்ஓ சாவடி முகவர்கள் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி இரு வார இறுதி நாளில் அனைத்து பூத்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த இருக்கிறோம். அந்த முகாமில் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நேரடியாக சென்று 3 முறை விசாரணை மேற்கொண்டும் கண்டறிய முடியாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறப்பு, பலஇடங்களில் பதிவு செய்தவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications