ஃபைலில் இருந்தது என்ன? கடைசி நேரத்தில்.. சாமர்த்தியமாக "கேம்" ஆடிய ஓபிஎஸ்.. நடுவில் மாட்டிய எடப்பாடி
சென்னை: அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அலுவலகம் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுக அலுவலகத்தில் பொதுக்குழு அன்று நடந்த மோதல் காரணமாக பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை மூலம் சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு
அதில் வழக்கில், அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த 11ம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு சிவில் வழக்கு என்பதால் நீண்ட நாட்களுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தேர்தல் ஆணையம், அதிமுகவில் உள்ள பிரச்னையை தீர்க்கும் வரை, இந்த சீல் பிரச்சனையும் தொடரும்.. இப்போதைக்கு பிரச்சனை முடியாது என்று கூறுகிறார்கள்.

ஓபிஎஸ்
இப்படிப்பட்ட நிலையில்தான் சாமர்த்தியமாக செயல்பட்டு சில முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக அலுவலகம் இப்படி சீல் வைக்கப்படலாம் என்று தெரிந்துதான் அவர் பொதுக்குழு அன்று கடைசி நேரத்தில் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றார் என்று கூறப்படுகிறது. அடுக்கடுக்காக பல்வேறு பைல்களை ஓபிஎஸ் தரப்பு அன்று காரில் ஏற்றி ஓபிஎஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றது. இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது .

சட்ட சிக்கல் இல்லை ஆனால்?
ஓபிஎஸ் தரப்பு இப்படி பைல்களை எடுத்து சென்றதால், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்ட ரீதியாக சிக்கல்கள் எதுவும் இல்லை. அதிமுக கட்சி சட்டங்கள் சிவி சண்முகம் போன்றவர்களுக்கு ஏ டூ இசட் தெரியும் என்பதால் அதில் பிரச்சனை இல்லை. ஆனால் ஓபிஎஸ் எடுத்து சென்ற ஆவணங்களில் பொருளாளர் தொடர்பான சில கணக்கு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு கட்சி நிதி தொடர்பான சில விவரங்களும் இருக்கின்றனவாம்.

என்ன சிக்கல்?
இது போக கடந்த உட்கட்சி தேர்தல், அதில் நிர்வாகிகள் தேர்வானது, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களும் அந்த ஃபைல்களில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சில ஆவணங்களை தாக்கல் செய்ய முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் ஓபிஎஸ்ஸிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

மாட்டிக்கொண்டார்
தற்போது அதிமுக அலுவலகம் உள்ளே செல்ல முடியாததால் உள்ளே இருக்கும் வேறு ஆவணங்களையும் எடுக்க முடியாத நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டு உள்ளதால் வருவாய் துறையிடம் அனுமதி கேட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். ஆனால் வருவாய் துறை ஒருவரை உள்ளே விட்டால் எதிர் தரப்பையும் விட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இரண்டு தரப்பையும் உள்ளே விட மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தெருவிற்கே செல்ல முடியாது.

மறுப்பு
வெளி கேட்டும் மூடப்பட்டுள்ளது. இதுதான் எடப்பாடி தரப்பிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆவணங்களும் இல்லை.. உள்ளேயும் போக முடியாமல் எடப்பாடி டீம் நடுவில் மாட்டி உள்ளது. ஓபிஎஸ்ஸோ சாமர்த்தியமாக செயல்பட்டு கடைசி நாளில் ஆவணங்களை எடுத்துவிட்டதால், அவரிடம் பல தேவையான முக்கிய ஆவணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications