அதிமுகவில் இனி என்ன நடக்கும்! தீர்மானிக்க போவது ஓபிஎஸ் எடுக்க போகும் முடிவு தான்!
சென்னை: ஒரு பக்கம் சசிகலாவின் திட்டம், மறுபக்கம் எடப்பாடி பழனிசாமியின் பதிலடி என தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அஇஅதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் அடுத்து என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்பது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் எடுக்கப்போகும் முடிவு தான் தீர்மானிக்கும்.
தமிழ்நாட்டில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. 179 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக அதிமுக தற்போது உள்ளது.
எதிர்க்கட்சி தவைர் பதவியை பிடிக்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் முட்டி மோதினர். இதில் அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு காரணமாக எடப்பாடி பழனிசாமியே வெற்றியும் பெற்றார். ஆனால் அதிமுக சட்டமன்ற கட்சியின் துணை தலைவர் மற்றும் கொறடா யார் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை..
தனிதனி அறிக்கை
கடந்த ஒரு மாதமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் எந்த ஒரு கட்டத்திலும் நேரடியாக சந்தித்து பேசிக்கொள்ளவில்லை. சட்டசபையில் நடந்த பதவியேற்பு விழாவில் கூடஇருவரும் அருகருகே அமர்ந்த போதும் ஒருவொருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. அதேபோன்று தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் எந்த அறிக்கையாக இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பெயரில் தனியாக வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகள் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வருகிறது. கட்சியில் ஆட்களை நீக்குவதில் மற்றும் கூட்டம் கூட்டுவது ஆகியவற்றிற்கு மட்டுமே இருவரும் சேர்ந்து கையெழுத்து போட்டு அறிக்கை விடுகிறார்கள்.
சசிகலா முடிவு
இப்படியாக ஓபிஎஸ், இபிஎஸ் சமூக விலகலுடன் இருந்து வந்த நிலையில், திடீரென சசிகலா என்ட்ரி கொடுத்துள்ளார். தலைவர்கள் யாரும் தன் பக்கம் திரும்பாத காரணத்தால், அதிமுக கட்சி தொண்டர்களை குறிவைத்து சசிகலா களம் இறங்கி உள்ளாராம். கட்சியை பழையபடி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்புவதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாக அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோக்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்புக்கு குறைந்த பின் ரிஎன்ட்ரி கொடுக்க சசிகலா முடிவு செய்துள்ளார். இதை தொண்டர்களிடமும் கூறி வருகிறார்.
எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி
சசிகலாவின் இந்த பேச்சுக்கு உண்மையிலேயே ஓ பன்னீர்செல்வம் தான் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் ஓ பன்னீர்செல்வம் இதுவரை சசிகலாவின் ஆடியோக்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சி என்ற முறையில் அரசுக்கு கோரிக்கைகள் வைப்பது, கண்டனம் தெரிவிப்பது என்ற முறையில் மட்டும் செயல்பட்டு வருகிறார்.
சசிகலாவிற்கு கண்டனம்
ஆனால் சசிகலாவின் நடவடிக்கைகளால் கொதித்து போன எடப்பாடி பழனிசாமி, நேற்று செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாக கருத்து தெரிவித்தார். கட்சியில் குழப்பம் விளைவிக்க சசிகலா முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின், விருகை ரவி, பால கங்கா உள்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் பங்கேற்றனர்.
எடப்பாடி ஓபிஎஸ் சந்திப்பு
எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது தெரியவில்லை. சசிகலா வருகையை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பது தெரியவில்லை. இந்த சூழலில் ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்வதற்காக அவரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி இன்று பேசியுள்ளார். ஓ பன்னீர்செல்வம் இனி எடுக்கப்போகும் முடிவு தான் அதிமுகவில் இனி என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.