உயரதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா? பாலியல் வழக்கில் எஸ்.பிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை: உயர் அதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா என்று, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. டி.கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி (சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்), அவருக்கு உதவியதாக எஸ்.பி. கண்ணன் (சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்) ஆகியோா் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கை டிசம்பர் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை விரைவாக நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து, 127 சாட்சிகளை விசாரித்து, 73 ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தனக்கெதிரான விசாகா கமிட்டிக்கு தடை கோரி சிறப்பு டிஜிபி மனு... அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றம்
சிபிசிஐடி விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்க அதிகாரமுள்ளதாக விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி தனது மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.
அவர் சொன்னார், நான் செய்தேன்
இதனிடையே, பெண் எஸ்.பி.க்கு கூடுதல் டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ் பி. டி.கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்ததில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, கண்ணன் தரப்பில் "கூடுதல் டிஜிபியாக இருந்தவரும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவரும் கூறிய அறிவுறுத்தலின்படியே தான், நான் செயல்பட்டேன்" என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி கேள்வி
அப்போது குறுக்கிட்ட நீதிபதி வேல்முருகன், பெண் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியது கடமை. ஒருவேளை, உங்கள் உயர் அதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். மேலும், உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் என கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கை வாபஸ்பெறுவதாக எஸ்.பி. கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கீழமை நீதிமன்ற விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விசாகா குழு விசாரணை
இன்னொரு பக்கம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ ஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி குற்றம் சாட்டியுள்ளார். சாட்சிகள் பலர், புகாரளித்த பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால், அவரை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
நீதிமன்றம் ஒத்தி வைப்பு
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி தரப்பில் விசாகா கமிட்டி விசாரணை முடிந்த 10 நாட்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதன் அறிக்கையை வழங்க வேண்டும் என்றும், ஆனால் இதுவரை தனக்கு வழங்கப்படவில்லை என்றும், குழுவை மாற்றியமைக்கும் கோரிக்கையும் பரிசீலிக்கபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கு குறித்து அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளார்.