இது திராவிட பூமி இல்லை.. அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை.. ஓடிருங்க - அதிர வைத்த மதுரை ஆதீனம்!
மடாதிபதிகள் காரில் வராக்கூடாதா? காரில் வராமல் கழுதைமேலேயா வருவோம் என்று மதுரை ஆதினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஆன்மிகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறார்களே; நாங்க பேசாமல் யார் பேசுவது என்று மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார். அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை? ஓடிடுங்க... இது திராவிட பூமி அல்ல ஆன்மிக பூமி என்றும் கூறியுள்ளார் மதுரை ஆதினம்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சினிமாத்துறையினரையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் சரமாரியாக திட்டி தீர்த்தார்.
அப்போது பேசிய அவர், "மடாதிபதிகள் காரிலே வரலாமா என்று கேட்கிறார்.. போப் எப்படி வந்தார் ?சொல்ல முடியுமா. நான் கேட்டேன் காரிலே வராமல் கழுதை மேலயா வருவோம்.. திராவிட நிழலில் எவ்வளவு பெரிய கோட்டையில் இவர்கள் வாழ்கிறார்கள் என்றார்

மதிக்க வேண்டாமா?
மத தலைவர்களை மதிக்க வேண்டாமா? சினிமாக்காரர்கள் மத தலைவர்களை எல்லாம் கிண்டலடிக்கின்றனர். நடிகர் விஜய் விநாயகருடன் நடிகையை ஒப்பிட்டு பேசுகிறார். கடவுளுடன் நடிகையை ஒப்பிடலாமா என்று கேள்வி எழுப்பினார். நாமெல்லாம் வாய் மூடி இருக்கிறோம். இந்துக்களை அவமரியாதை செய்கின்றனர். மாற்று மதம் பற்றி ஏதாவது ஒன்று தவறாக இருந்தால் கதறுகிறார்கள்.

தேசபக்தி தெய்வ பக்தி
நாட்டில் தேசபக்தியும் தெய்வ பக்தியும் குறைந்து விட்டது என்று கூறினார். அரசு தமிழை வளர்ப்பதாக கூறுகிறது. மதசார்பற்ற நாடு என்று சொல்கிறீர்கள். ஒரு மதத்திற்கு ஒரு நியாயமா என்று சொன்னார். அரசியல்வாதிகளுக்கு நாம் பயப்பட வேண்டாம். அவர்களுக்கு 5 ஆண்டுகாலம்தான் ஆட்சிக்காலம்.

நிர்வாகம் சரியில்லை கேட்க நாதியில்லை
இப்படியெல்லாமா கொச்சைப்படுத்துவது? என்று கேள்வி எழுப்பினார். மடத்துக்குள்ளே இருந்தால் மடத்துக்குள்ளேயே இருக்கிறீர்கள் என்பது, வெளியில் வந்தால் ஏன் வெளியே வருகிறீர்கள் என்பது? இப்படியெல்லாம் பேசுகிறார் அந்த ஆள்! இப்போ இங்கே இருந்தா குடுகுடுன்னு ஒன்னு கொடுக்கலாம்ன்னு இருந்தேன்.
இது என்ன இது அக்கிரமமாக இருக்கிறது. 35 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன ஒரு கோவில் கூட ஒழுங்காக நிர்வாகம் செய்ய முடியவில்லை, கோயில்கள் சிலை போச்சு, சொத்துக்கள் போச்சு, இன்னைக்கு நகை எல்லாம் போச்சு, கேட்க நாதியில்லை.

கோவிலில் என்ன வேலை
அரசு நமக்கு எந்த நன்மையும் செய்யாது. நான் அரசியல் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம் உள்ளதைத்தான் சொல்கிறேன். ஆன்மிகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறார்களே என்று கூறிய அவர், நாங்க பேசாமல் யார் பேசுவது? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? ஓடிடுங்க..என்று சொன்ன போது கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

ஆன்மீக பூமி
இன்னும் இரண்டுதான் நமக்கு தரவில்லை இலவச திருவோடு, இலவச கோவணம் அதை அரசு தரவில்லை என்று கூறினார் மதுரை ஆதினம். இந்த சென்னையில் தான் வள்ளலார் வாழ்ந்தார்; இந்த சென்னையில் தான் சுவாமி விவேகானந்தர் வந்து வாழ்ந்தார்; இந்த சென்னையில்தான் பட்டினத்தார் சமாதி இருக்கிறது. இது ஆன்மீக பூமி திராவிட பூமி அல்ல " என்று கூறினார் மதுரை ஆதினம். முந்தைய ஆதினம் அரசியல் பேசுவதை விட புதிய ஆதினத்தின் அரசியல் பேச்சு அதிரடியாக இருந்தது.












Click it and Unblock the Notifications