குடும்ப வன்முறை சட்டம் வந்த பிறகு திருமண புனிதம் அர்த்தமற்று போய்விட்டது- சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: மனைவிக்கு எதிராக, கணவன், வழக்கு தொடர குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற ஏற்பாடு இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வழக்கு விசாரணையொன்றின்போது தெரிவித்துள்ளார்.
குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களால் தவறாக கையாளப்படுவதை குறிப்பிடுவதற்காக இப்படி ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நீதிபதி.
நீதிமன்றம் எத்தனையோ வினோத வழக்குகளை விசாரித்துள்ளது.
தவறாக பயன்படுத்திய மனைவி
அப்படித்தான், ஒரு நபர் தனது மனைவி, குடும்ப வன்முறைச் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதால், தன்னை வேலை பார்த்த அரசு நிறுவனத்திலிருந்து பணி இடை நீக்கம் செய்து விட்டதாகவும், பணியை திரும்பத் தர உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி கருத்து
இதை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். விசாரணையின்போது, நீதிபதி சில கருத்துக்களை முன் வைத்தார். "மனுதாரரின் மனைவி, அவரை கொடுமைப்படுத்தியதாக கூறி, குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில், மனுதாரருக்கு எதிராக அவர் மனைவி, போலீசில், குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்துள்ளார்.
உள் நோக்கம்
இந்த வழக்கில் மனுதாரரின் மனைவியை நேரில் ஆஜராக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தும் கூட, அவர் ஆஜராகவில்லை. எனவே, கணவனை, துன்புறுத்தும் என்னத்தோடுதான், அவர் மனைவி, குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் புகார் கொடுத்திருக்கிறார் என்று நீதிமன்றம் முடிவு செய்கிறது.
கணவனுக்காக சட்டம் இல்லையே
மனுதாரரை அவர் மனைவி தேவையில்லாமல் தொல்லை செய்துள்ளார். மனைவிக்கு எதிராக, கணவன் புகார் அளிக்க குடும்ப வன்முறைச் சட்டம் மாதிரி ஒரு சட்டம் இல்லை என்பது துரதிருஷ்டவசமானது. தற்போதைய தலைமுறை மக்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். திருமணம் என்பது ஒப்பந்தம் கிடையாது. ஆனால் புனிதமானது. குடும்ப வன்முறைச் சட்டம், 2005, நடைமுறைக்கு வந்தபின், 'புனிதம்' என்ற சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இது லிவ்விங் டு கெதர் உறவை அங்கீகரிக்கிறது. கணவனும் மனைவியும் 'ஈகோ' மற்றும் 'சகிப்புத்தன்மை' என்பது செருப்பு போன்றவை என்பதை உணர வேண்டும். அவற்றை வீட்டுக்கு வெளியே வைக்க வேண்டும். அவை வீட்டிற்குள் நுழைந்தால், குழந்தை / குழந்தைகள் ஒரு மோசமான வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சஸ்பெண்ட் கூடாது
2015 ஆம் ஆண்டில் குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த 19.02.2020 தேதியிட்ட உத்தரவின் மூலம் குடும்பப் பிரச்சினை ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதால், மனுதாரரை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய கேள்வியே எழுவதில்லை, மேலும், கணவரை துன்புறுத்ததான் இந்த வழக்கை மனைவி தொடர்ந்துள்ளார்.
ஊதியம் கொடுங்க
மனைவி தாக்கல் செய்த குற்றச்சாட்டு அடிப்படையில், கணவன் குற்றவாளியா இல்லையா என்ற கேள்விக்கு உரிய இடத்தில் தீர்வு கிடைக்கட்டும். ஆனால் அதற்காக, மனுதாரரை வேலையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கருதுகிறது. ஒருவேளை வழக்கு சமரசத்தில் முடிவடைந்தால் அல்லது மனுதாரர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டால், அவருக்கு சஸ்பென்ட் காலத்தில் பிடிக்கப்பட்ட ஊதியம் அரசால் வழங்கப்பட வேண்டும்." இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.