அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு எப்போது? - வெளியான பரபர தகவல்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர் ஆலோசனை!
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி அல்லது செப்டம்பர் 1ஆம் தேதி வழங்கப்படலாம் என உயர்நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈபிஎஸ் தரப்பால் நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார்.
ஐகோர்ட் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தீர்ப்பு, வரும் வாரம் வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வைகோ மகனின் 7 வருடக் கனவு! 3 வருட முயற்சி! 1 வருட உழைப்பு! 'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் தயார்!
அதிமுக பொதுக்குழு வழக்கு
ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
தலா ஒரு மணி நேரம் வாதம்
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த 25ஆம் தேதி நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இரு தரப்பிற்கும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
ஈபிஎஸ் தரப்பு வாதம்
எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர். ஜூன் 23 ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது எனச் சுட்டிக்காட்டினர்.
உட்கட்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது
தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே தவிர, ஒன்றரை கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல எனவும் சுட்டிக்காட்டினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும், உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர்.
ஓபிஎஸ் தரப்பு வாதம்
தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்றும், அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும், இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
தேதி குறிப்பிடாமல்
இரு பதவிகளும் காலியாகவில்லை என முடிவுக்கு வந்ததன் காரணமாகவே ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், அனைத்து தரப்பும், எழுத்து பூர்வமான வாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
தீர்ப்பு எப்போது
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அல்லது செப்டம்பர் 1-ஆம் தேதி வியாழக்கிழமை வழங்கப்படலாம் என உயர் நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி, ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினரும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.