தமிழ் பெண்களுக்கு எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்! "இந்த" வயதை கடந்தால் திருமணம் ரொம்பவே கஷ்டமாம்!
சென்னை: தமிழ் பெண்கள் எந்த மாதிரியான ஆண்களை விரும்புகிறார்கள் என்பது குறித்த பட்டியலைப் பிரபல மேட்ரிமோனி தளம் வெளியிட்டுள்ளது. இதில் வயது, வருமானம், வேலை எனப் பல காரணங்களை விளக்கியுள்ளனர்.
அந்த காலத்தில் எல்லாம் திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்டது என்பார்கள். ஆனால், இப்போது அந்த நிலை மாறி திருமணம் என்பது ஆன்லைனில் நிச்சயம் செய்யப்படுகிறது.

மாறி வரும் வாழ்க்கை முறை, நகரமயமாக்கல் உள்ளிட்டவை காரணமாக இப்போது ஆன்லைனில் தான் வரன் தேடுகிறார்கள். இதற்காகவே இப்போது ஏகப்பட்ட மேட்ரிமோனி தளங்கள் இருக்கிறது.
புதிய லிஸ்ட்: புதிது புதிதாகப் பல நிறுவனங்கள் வருவதே இது எவ்வளவு பெரிய துறையாக மாறுகிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது. இதற்கிடையே பிரபல நிறுவனமான தமிழ் ஷாதி தளம் 'இந்தியாவின் மிகவும் தகுதியான தமிழர்கள்' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் எந்த மாதிரியான வரன்களை விரும்புகிறார்கள் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
வருமானம், தொழில், வயது மற்றும் கல்விப் பின்னணி எனப் பலவற்றைக் கணக்கிட்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இந்த சர்வேவை நடத்தியுள்ளனர். வருமானம், தொழில், வயது மற்றும் கல்வி பின்னணி ஆகியவற்றில் எதற்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது குறித்தும் விளக்கியுள்ளனர்.
எந்த வேலை: ஆண் மற்றும் பெண்கள் என இருபாலரும் ஐடி ஊழியர் மற்றும் மென்பொருளாளரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். குறிப்பாக மற்ற வேலையைக் காட்டிலும் ஐடி ஊழியர்களாக இருக்கும் ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளவே தமிழ் பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். அதேபோல மற்ற வேலைகளைக் காட்டிலும் ஐடி துறையில் வேலை செய்யும் பெண்களைத் திருமணம் செய்ய ஆண்கள் 30% அதிகம் விரும்புகிறார்கள். வழக்கறிஞர்களாக இருக்கும் பெண்களைத் திருமணம் செய்யவும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், இளங்கலை பட்டம் பெற்றவர்களைக் காட்டிலும் முதுகலைப் பட்டம் பெற்ற ஆண்களை 2.5 மடங்கு அதிகமாக விரும்புகிறார்களாம். பெண்கள் குறைந்தது எதாவது ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும் என்பதே ஆண்களின் விருப்பமாக இருக்கிறது. ஆண்கள், பெண்கள் என இருவரும் நிதிக்கு அதிக முக்கியதும் தருகிறார்கள். ஆண்டுக்கு ரூ.30 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் நபர்களே மிகவும் விரும்பத்தக்க நபர்களாக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வயது முக்கியம்: காதலுக்கு வயது இல்லை என பொதுவாகப் படங்களில் வயது இருக்கும். ஆனால், மேட்ரிமோனியில் அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. வயது முக்கிய விஷயமாக இருக்கிறது. 34 வயதைக் கடந்த ஆண்களுக்குப் பொருத்தமான நபரைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கணிசமாகக் குறைவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல வரன் தேட தொடங்கும் வயதும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதாம். கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களுக்கு வரன் பார்க்கத் தொடங்கும் வயது சுமார் 2.2 ஆண்டுகளும் பெண்களுக்கு ஒரு ஆண்டும் அதிகரித்துள்ளது. அதேபோல வீட்டு வேலையை மட்டும் செய்யும் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளத் தமிழ் ஆண்கள் 34% குறைவாகவே விரும்புகின்றனர். வீட்டின் வருமானத்தை அதிகரிக்க இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications