அதிமுகவில் பரபரக்கும் ராஜ்யசபா சீட் ரேஸ்! முட்டிமோதும் இரண்டு வக்கீல்கள்! யாருக்கு ஜாக்பாட்?
சென்னை: அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்களை பெறுவதற்கான பந்தயம் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இடையே படுஜோராக நடைபெற்று வருகிறது.
இதனிடையே அதிமுக வழக்கறிஞர்கள் இருவரில் ஒருவருக்கு ராஜ்யசபா சீட் உறுதி என்ற தகவலும் கசிந்துள்ளது.
மீதமிருக்கும் ஒரு இடத்தை ஜெயலலிதா பாணியில் கட்சியின் அடிமட்ட நிர்வாகி ஒருவருக்கு கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“அதிமுக கொண்டுவந்த சட்டமா இருந்தாலும் ஏன் உறுதியா இருக்கேன் தெரியுமா?” - ஸ்டாலின் உருக்கமான பேச்சு!
ராஜ்யசபா தேர்தல்
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 6 இடங்கள் உட்பட மொத்த 57 இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது.
இதேபோல் அதிமுக சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் நிறைவடைகிறது.
கடும் போட்டி
தற்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் திமுக 4 இடங்களும், அதிமுக 2 இடங்களும் கைப்பற்ற முடியும். அந்த வகையில் அதிமுக
சார்பில் காலியாகும் 2 இடங்களை கைப்பற்ற அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் போட்டி போட்டு வருகின்றனர். சென்னை, சேலம், நாமக்கல், கோவை, தேனி, என பல அதிமுக வி.ஐ.பி.க்களின் கார்கள் சீறி வருகின்றன. ஆனால்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக பாணியை கையில் எடுத்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
வழக்கறிஞர் ஒருவருக்கு
அதிமுகவுக்கு சோதனையான காலகட்டமான இந்நேரத்தில் தொடர்ந்து கட்சி சார்பான வழக்குகளை கையாண்டு வரக் கூடிய வழக்கறிஞர்கள் பாபு முருகவேல், இன்பதுரை ஆகிய இருவரில் ஒருவருக்கு எம்.பி. ஆகக் கூடிய ஜாக்பாட் அடிக்கும் எனத் தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு டெல்லி அரசியலில் அறவே விருப்பம் இல்லாததால் பாபு முருகவேலுக்காக அவர் பலத்த சிபாரிசு செய்து வருகிறாராம்.
முன்னாள் அமைச்சர்கள்
இதேபோல் இன்பதுரைக்காக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்களாம். ஆகையால் இவர்கள் இருவரில் ஒருவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி உறுதி எனத் தெரிவிக்கப்படுகிறது. மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு அதிமுக சார்பு அணிகளின் செயலாளர்கள் போட்டி போட்டு வரும் நிலையில், ஜெயலலிதா பாணியில் தனது தீவிர விசுவாசியாகவும், கட்சியின் நீண்டகால உழைப்பாளராகவும் திகழக் கூடிய அடிமட்ட நிர்வாகி ஒருவருக்கு கொடுக்கலாம் என்பது இ.பி.எஸ்.ஸின் செயல் திட்டமாம்.
ஓ.பி.எஸ். அமைதி
ஆனால் இந்த விவகாரத்தில் ஓ.பி.எஸ்.வழக்கம் போல் அமைதி காக்கிறாராம். இதனால் அதிமுகவில் ராஜ்யசபா தேர்தல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிறைய பேர் சீட் கேட்டு படையெடுப்பதால் ஓ.பி.எஸ்.சுடன் ஆலோசித்து விரைவில்
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் விவரத்தை வெளியிட எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.