விஜய் சேதுபதியை செதுக்கியவர்.. பத்மஸ்ரீ பெற்றவர்.. மாபெரும் கலைஞன் ந.முத்துசாமி
சென்னை: கூத்துப்பட்டறை மூலமாக பல திறமைமிக்க கலைஞர்களை கலையுலகத்திற்கு அளித்த ந.முத்துசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.
1936ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி அப்போதைய தஞ்சை மாவட்டத்தின் மாயவரம் அருகில் உள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தவர் ந.முத்துசாமி. இன்டர்மீடியட் 2ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, படிப்பைத் தொடராமல் சென்னைக்கு வந்தவர்.
இவர் எழுதிய சிறுகதை தொகுப்புகள் வெகு பிரபலமானவை. முதல் தொகுப்பாக நீர்மை' வெளியானது. நடை, ஞானரதம், எழுத்து, கசடதபற, கணையாழி போன்ற பல சிற்றிதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியுள்ளார் முத்துசாமி.
[சங்கீதத்தை விட உயர்ந்தது நாடகம்.. கடைசி வரை கலையை சுவாசித்த ந. முத்துசாமி ]
கூத்துப்பட்டறை
ந.முத்துசாமியின் முதல் நாடகம், ‘காலம் காலமாக'. அது வெளியாகி 50 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதை தொடர்ந்து ‘அப்பாவும் பிள்ளையும்' நாடகமும், பின்னர் ‘நாற்காலிக்காரர்' நாடகமும் வெளிவந்தன. இதன்பிறகுதான், ‘கூத்துப்பட்டறை' என்ற அமைப்பை 1977ம் ஆண்டு ஏற்படுத்தினார் முத்துசாமி. நல்ல நடிகர்களை உருவாக்குவது இதன் குறிக்கோள். கூத்துக் கலைஞர்களை அழைத்து வந்து நடிகர்களுக்கு இயல்பான பயிற்சிகளை வழங்கினார்.
பிற்காலத்து நாடகங்கள்
நற்றுணையப்பன், இங்கிலாந்து, படுகளம், அர்ச்சுனன் தபசு ஆகிய இவர் எழுதிய நாடகங்கள் 1980களுக்கு பிந்தைய பெரும் வரவேற்பை பெற்ற நாடகங்களாகும். புஞ்சையை விட்டு பிரிந்து சென்னை வந்துவிட்டாலும், தனது சொந்த ஊர் நினைவுகள் துரத்தியபடியே இருப்பதாக கூறி வந்தவர் முத்துசாமி. அந்த நினைவுகள் ஓலம் இடுகின்றன என்று கூறிய முத்துசாமி, தனது படைப்புகளில் ஊர் நினைவுகளை மெல்லியதாக படர விடுவார்.
சொந்த ஊர் நினைவுகள்
அந்த ஊர் என்னுடையது என்றாலும், இப்போது அங்கே உள்ள மனிதர்கள் என்னை அன்னியமாகத்தானே பார்ப்பார்கள் என்று தனது உள்ள குமுறலை அவர் வெளியிட்டுள்ளார். இந்த குமுறலை தனது பாத்திர படைப்புகளில் பழைய நினைவுகளை ஊற்றி நிரப்பி தீர்த்துக்கொள்வார். படைப்பாளிகளுக்கு, தங்கள் பாலிய கால நினைவுகள் பசுமரத்தாணி போல, அழுத்தமாக மனதில் பதிந்துவிடும் என்பார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் ந.முத்துசாமி.
எல்லாமே சிறப்புதான்
மெய்ஞானி குர்ட்ஜிப் மீது அபார ஈர்ப்பு கொண்டவர் முத்துசாமி. எல்லாவற்றிற்கும் மதிப்பு உள்ளது, சிறப்பான விஷயம் இல்லை என்று எதுவுமே கிடையாது, என்ற மனநிலையை குர்ட்ஜிப்பிடமிருந்து கற்றுக்கொண்டதாக கூறுவார். 2004ல் மீண்டும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். தமிக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு, சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ ஆகியவை இவர் பெற்ற கவுரவங்களாகும். ‘ந.முத்துசாமி கட்டுரைகள்' என்னும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் பிரிவில் பரிசு பெற்றிருக்கிறது. 2012ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையைப் பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர்கள்
நடிகர்கள் விஜய்சேதுபதி,பசுபதி, ‘ஆடுகளம்' முருகதாஸ், 'ஜோக்கர்' குருசோமசுந்தரம், விமல், விதார்த், கலைராணி உள்ளிட்ட ஏராளமான தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த நடிகர்களை தனது ‘கூத்துப்பட்டறை' நடிப்புப் பயிற்சி அமைப்பின் மூலம் பட்டை தீட்டியவர் முத்துசாமி.