இப்ப தெரியும் பாருங்க.. உண்மையான ஸ்லீப்பர் செல்கள் யார் யாருன்னு? அமமுகவினர் உற்சாகம்
சென்னை: இப்ப தெரியும் பாருங்க.. உண்மையான ஸ்லீப்பர் செல்கள் யார் யாருன்னு? என்று அமமுகவினர் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மிகவும் உற்சாகமாக உள்ளனர்.
தமிழக அரசியலில் சசிகலா வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா இருந்த போது தனித்துவமான ஆளுயைமாக இருந்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் முதல்வர் பதவியை ஏற்க முடியவில்லை.
இதனால் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். சசிகலா சிறைக்கு போகும் போத டிடிவி தினகரனை அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக நியமித்தார்.
தர்மயுத்தம்
ஆனால் திடீர் திருப்பமாக சசிகலாவை மற்றும் அவரது குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று குரல் எழுப்பி தற்போதைய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கினார். அவருக்கு டெல்லி மேலிட ஆதரவு இருந்ததால் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்தனர். டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இரட்டை இலையையும் மீட்டனர்.
திமுகவில் ஐக்கியம்
ஆனால் டிடிவி தினகரன் அதிமுகவை மீட்க நடத்திய சட்டப்போராடடம் கைகூடவில்லை. அதேபோல் அவரை நம்பி வந்த 18எம்எல்ஏக்களும் மீண்டும் எம்எல்ஏ ஆக முடியவில்லை. அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனுடன் சேர்ந்த பலர், அவரது அமமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோற்றதால் மீண்டும் அதிமுகவுக்கு சென்றுவிட்டர். தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் திமுகவுக்கு சென்றுவிட்டனர்.
டிடிவி தினகரன்
இதனால் ஒரு கட்டத்தில் முக்கிய தலைவர்கள் எல்லோரும் போய்விட்டதால் டிடிவி.தினகரன் தனித்துவிடப்பட்டார். தன்னை நம்பி வந்த எம்.எல்.ஏக்களையே டிடிவி.தினகரன் ஏமாற்றிவிட்டார் என அதிமுகவினரும் எள்ளி நகையாடினார்கள் அப்போது, அதிமுகவில் உள்ள எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் தேவையான நேரத்தில் வெளியே வருவார்கள் என டிடிவி.தினகரன் கூறியிருந்தார்,.
அமமுகவினர் உற்சாகம்
ஆனால், ஆண்டுகள் உருண்டோடுடின. யார் ஸ்லீப்பர் செல்கள் என தெரியாமலேயே இதுவரை இருந்த வந்தது. தற்போது சசிகலா விடுதலையாகி வரும் நாளை சென்னை திரும்பும் போது அந்த ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் தியாகராய நகருக்கு படை எடுப்பார்கள் பாருங்கள் என அமமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஸ்லீப்பர் செல் வரிசையில் சில அதிமுக எம்.எல்.ஏக்களும் உள்ளதாகவும் அமமுகவினர் சொல்கிறார்கள். இதனால் நாளை யாரெல்லாம் சசிகலாவை சந்திக்க போகிறார்கள் என்ற பரபரப்பு நிலவுகிறது.