நெருக்கடியான சூழலில் பொறுப்புக்கு வரும் சங்கர் IPS.. ‘ஃபீல்டு வொர்க் கிங்’- யார் இந்த புதிய ஏடிஜிபி?
சென்னை : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வரும் சூழலில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் சங்கர் ஐபிஎஸ்.
கோவை கார் வெடிப்பு சம்பவம், வன்முறை, குற்றச் சம்பவங்கள் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு ஆகியவற்றால் எதிர்க்கட்சிகள், தமிழக அரசையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை உள்ளிட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கில் பணியாற்றியவரும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றியவருமான சங்கர் இப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை கூடுதல் செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்ற நிலையில் புதிய சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபி பதவியை சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி
தமிழக சட்டம் - ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், சங்கர் உள்ளிட்ட 6 முக்கிய அதிகாரிகளில் ஒருவரே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், ஏடிஜிபி பதவி சங்கர் ஐபிஎஸ்ஸூக்கு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட ஆலோசனைக்கு பிறகே சங்கர் ஐபிஎஸ் இப்பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.

சங்கர் ஐபிஎஸ்
1996ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை ஐஐடியில் பொறியியல் படித்து முடித்து ஐபிஎஸ் ஆனவர். ஏஎஸ்பியாக சிவகாசியில் காவல்துறை பணியை தொடங்கிய சங்கர், துணை ஆணையராக பதவி உயர்வு கிடைத்த பிறகு, கோவை நகர துணை ஆணையராகப் பணியாற்றினார். பின்னர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் திறமையாக பணியாற்றி பாராட்டைப் பெற்றவர்.

வடக்கு மண்டல ஐஜி
2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை கொல்கத்தாவில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவில் மண்டல இயக்குநராக பணியாற்றியுள்ளார் சங்கர். மத்திய பணியில் இருந்து மீண்டும் தமிழகம் வந்து 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை சென்னை காவல்துறை இணை ஆணையராக பணியாற்றியுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணையர், மேற்கு, வடக்கு மண்டல ஐ.ஜி என பல்வேறு நிலைகளிலும் பணியாற்றியுள்ளார் சங்கர்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி
2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை காவல்துறையின் முக்கிய பொறுப்பான சிபிசிஐடி ஐஜியாகவும், 2021ஆம் ஆண்டு வடக்கு மண்டல ஐஜியாகவும் பணியாற்றி உள்ளார். தற்போது நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக இருந்து வந்த சங்கர், தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்றதை அடுத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு
ஏடிஜிபி சங்கர் 2011ஆம் ஆண்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறந்த பணிக்காக பதக்கம், 2012ஆம் ஆண்டு காவல்துறையில் சிறப்பாகப் பணி செய்ததற்காக குடியரசு தலைவர் பதக்கம், 2020ஆம் ஆண்டு சிறந்த மக்கள் சேவை செய்ததற்காக முதல்வர் பதக்கம், 2022ஆம் ஆண்டு சிறந்த பணிக்காக குடியரசு தலைவருக்கான பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். சங்கர் ஐபிஎஸ், தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, பெங்காலி ஆகிய 5 மொழிகளை நன்கு அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபீல்டு வொர்க் கிங்
சங்கர் ஐபிஎஸ், ஃபீல்டு வொர்க் எனப்படும் களப்பணியில் கைதேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் புழக்கம் ஆகியவையே எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்படும் பிரச்சனைகளாக இருந்து வரும் நிலையில், இரண்டு துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ள சங்கர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு விஷயங்களால் தமிழகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில் சங்கர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications