ஜெயலலிதா இருந்த பதவியில் வேறு யாரும்? முட்டாள்தனம்.. ஓபிஎஸ் திமுக பி டீம்..விளாசிய அதிமுக நிர்வாகி!
புதுச்சேரி : ஒற்றைத் தலைமையை ஏற்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அ.தி.மு.கவிற்கு எதிரானவர்கள். அவர்கள் தி.மு.கவின் பி டீம் என அதிமுக புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், ஜெயலலிதா இருந்த பொதுச் செயலாளர் பதவியில் வேறு யாரும் வரக்கூடாது என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், பொதுச்செயலாளர் பதவியில் ஜெயலலிதா இருந்தார் என்பதற்காக அந்த பதவியில் யாரும் அமரக்கூடாது எனக் கூறுவது முட்டாள்தனமானது என விமர்சித்துள்ளார்.

அதிமுக மோதல்
அதிமுகவில் சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து ஒற்றைத் தலைமை குறித்த மோதல் வெடித்தது. ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆக்க தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இதற்கு அதிமுகவின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் எதிர்ப்பு
ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் தேவையற்றது என்றும் அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார். பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரிமையானது, ஜெயலலிதா வகித்த பதவியில் வேறு யாரும் இருக்கவேண்டாம் என்றே இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது, இப்போது அதை மாற்றினால் ஜெயலலிதாவிற்கு கொடுத்த மரியாதை காலாவதியானதாக அர்த்தம் என கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி தரப்பினர்
எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ, கட்சியின் நலனுக்காக பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் ஏற்படுத்தி எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்று பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொதுச் செயலாளர்
புதுச்சேரி அன்பழகன் பேசுகையில், "பொதுச்செயலாளர் பதவியில் ஜெயலலிதா இருந்தார் என்பதற்காக அந்த பதவியில் யாரும் அமரக்கூடாது எனக் கூறுவது முட்டாள்தனமானது; கேலிக்கூத்தானது. ஜெயலலிதா முதல்வர் பதவியை கூடத்தான் வகித்தார் அதற்காக யாரும் முதல்வர் பதவி வகிக்காமல் இருக்க முடியுமா? பொதுச் செயலாளர் பதவி என்பது இப்போது கட்சிக்கு அவசியம்.

கால தாமதம்
சமீபத்தில் தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் ராஜ்யசபா பதவிக்கு இரண்டு பேரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறியால் கால தாமதம் ஏற்பட்டது. இரட்டைத் தலைமை காரணமாகவே பல பிரச்சனைகளுக்கு பிறகு இருவர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஒற்றைத் தலைமை இருந்தால் இதுபோன்ற விஷயங்களில் வேகமாக முடிவெடுக்க முடியும். அதற்காகத்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.

அதிமுகவிற்கு எதிரானவர்கள்
பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் யார் தடை உத்தரவு வாங்கினால் அவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள். அவர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட வேண்டியவர்கள். புகழேந்தி என்பவர் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அமர்ந்துகொண்டு இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை தவறாகப் பேசி வருகிறார்.

திமுகவின் பி டீம்
பொதுச் செயலாளர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் எடப்பாடி பழனிசாமிதான். அவர்தான் தி.மு.கவை துணிச்சலாக எதிர்ப்பார். தி.மு.கவை எதிர்க்கக்கூடிய தலைவர் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி. ஒற்றைத் தலைமையை ஏற்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அ.தி.மு.கவிற்கு எதிரானவர்கள். அவர்கள் தி.மு.கவின் பி டீம்" எனத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

எடப்பாடிக்கு ஆதரவாக தீர்மானம்
மேலும், அ.தி.மு.க பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வது என புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நேற்று அன்பழகன் தலைமையில் நடைபெற்ற புதுச்சேரி கிழக்கு அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவில் ஒரே தலைமையாக பொதுச்செயலாளர் பதவியை வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்றும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications