என்னாச்சி.. அதிருப்தியில் குஷ்பு? மோடி பிறந்த நாள் நிகழ்ச்சியில் மிஸ்சிங்.. ஒதுங்குவது ஏன்?
சென்னை: பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு சமீப காலமாக அக்கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் இருந்து தள்ளியே இருக்கிறார். அல்லது தள்ளி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்பதை போல இருக்கிறது அவரது செயல்பாடுகள். உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்திற்கு அவர் அரண்மனை 3 படத்தை வழங்கியிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திமுகவில் அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர் குஷ்பு. அங்கு சில கசப்புகள் ஏற்பட்டதால், காங்கிரஸ் கட்சிக்குச் சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்து ட்வீட்கள் வெளியிடுவதை அப்போது வாடிக்கையாக வைத்திருந்தார்.
அதேநேரம், காங்கிரஸ் கட்சியில் குஷ்பு எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை. எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடும் வாய்ப்பை குஷ்புவிற்கு காங்கிரஸ் தரவில்லை.

பாஜகவில் குஷ்பு
இந்த நிலையில்தான், யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜக கட்சியில் குஷ்பு இணைந்தார். தமிழக பாஜகவில் சேர்ந்தால் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. சட்டசபை தேர்தலில் எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்பது குஷ்புவின் திட்டவட்ட எதிர்பார்ப்பாக இருந்தது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் களமிறங்கும் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட விரும்பினார். அதற்கு சமிக்ஞை அளிப்பதை போலவே, குஷ்புவிற்கு இந்த தொகுதியின் பாஜக பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. சேப்பாக்கம் எப்போதுமே திமுக கோட்டையாக இருந்து வந்துள்ளது வரலாறு. அதிமுகவே பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்குத்தான் இந்த தொகுதியை ஒதுக்கிவிட்டு, ஜாக்கிரதையாக ஒதுங்கிக் கொள்வது வழக்கம். இதையெல்லாம் கணக்குப் போட்டு பார்த்து பாஜகவுக்கு சேப்பாக்கம் கிடைக்கும், தான் அதில் போட்டியிடலாம் என குஷ்பு நினைத்தார்.

பிரமாண்ட பணிமனை
சேப்பாக்கத்தில், 9 கிரவுண்ட் இடத்தில் நடிகை குஷ்பு தனது தற்காலிக தேர்தல் பணிமனையை அமைத்து அசத்தினார். குஷ்பு சினிமா துறையில் இருந்து வந்ததவர் என்பதால், தேர்தல் பணிமனையையும் சினிமா பாணியில் முற்றிலும் வித்தியாசமாக வடிவமைத்தார். இப்படியாக தீவிரமாக செயல்பட்டாலும் சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட குஷ்புவிற்கு பாஜக சீட் கொடுத்தது. ஆனால் திமுக வேட்பாளர் எழிலனிடம் குஷ்பு தோல்வியடைந்தார்.

தீவிரமாக இல்லை
அப்போது முதலே குஷ்பு பெரும்பாலும் பாஜக நிகழ்ச்சிகளில் முன்னால் வந்து நிற்பதில்லை. அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு குஷ்புவை ட்விட்டரில் மட்டும்தான் பார்க்க முடிகிறது. அதிலும் முன்பு போல தீவிரமாக பாஜகவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்புவதும் இல்லை.

உள்ளாட்சித் தேர்தல் குழு
இந்த நிலையில்தான் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க தமிழக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா இரண்டு பேர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். இதிலும், குஷ்புவிற்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை.

வீட்டுக்கு பக்கத்தில் நிகழ்ச்சி
இதோ.. இன்று காலை, பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று காலை பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றனர். ஆனால், சாந்தோமில்தான் வீடு இருந்தாலும் பக்கத்திலுள்ள பெசன்ட் நகர் கடற்கரை நிகழ்ச்சியில் குஷ்பு ஆப்சென்ட். ஆனால் கடந்த வருடம், மோடி பிறந்த நாள் தினத்தன்று குஷ்பு ரொம்பவே ஆக்டிவாக இருந்ததை கவனிக்க முடிந்தது. பாஜக நடத்திய மோடி பிறந்த நாள் விழாவில் கூட இன்று குஷ்பு பங்கேற்கவில்லை என்பதை வைத்து பார்த்தால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா, அல்லது, அவரே சற்று ஒதுங்கியிருக்கிறாரா என்பதுதான் தெரியவில்லை. இது தொடர்பாக விளக்கம் பெற, குஷ்புவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, தற்போது மீட்டிங் ஒன்றில் பங்கேற்றுள்ளதாகவும், பின்னர் தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்தார்.

பாஜகவிற்குள் சலசலப்பு
இன்னொரு பக்கம், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள 'அரண்மனை 3' படத்தின் வெளியீட்டு உரிமை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் குஷ்பு. இப்போது அவரது கணவர் இயக்கிய திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இது பாஜகவிலுள்ள சில சீனியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் கசிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications