விஜய் பிரச்சாரம்! கரூரில் இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்? தமிழக அரசு முக்கிய விளக்கம்
சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் உடல்கள் அன்றிரவே பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே உடல்கள் அவசர அவசரமாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாகச் சிலர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பாக அரசுத் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
விஜய் பங்கேற்ற கரூர் பிரச்சாரத்தில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது. அங்கு விஜய்யை பார்க்கப் பொதுமக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். விஜய் வாகனம் அங்கு வந்தபோது திடீரெனக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் அங்கு பலருக்கும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இந்த மோசமான சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

குற்றச்சாட்டு
இந்தியாவில் அரசியல் கூட்டம் ஒன்றில் இந்தளவுக்கு மோசமான சம்பவம் இதற்கு முன்பு நடந்ததே இல்லை. சம்பவம் நடந்த அன்றே உயிரிழந்தோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே உடல்கள் அவசர அவசரமாகப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
தமிழக அரசு விளக்கம்
இதற்கிடையே இது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சுகாதாரத் துறைச் செயலாளர் கூறுகையில், "கரூர் மருத்துவமனையில் மொத்தம் சில மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளனர். மேலும், அன்றைய தினம் தான் அண்டை மாவட்டமான சேலத்தில் பொதுச் சுகாதார மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நிறைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். நானும் அதில் பங்கேற்றிருந்தேன். இந்தச் செய்தி வந்ததும் அந்த மருத்துவர்களை கரூர் செல்லச் சொல்லிவிட்டோம்.
பொதுவாகவே பிரேத பரிசோதனை தொடர்பான வழக்குகளில் சீக்கிரம் செய்து கொடுக்கச் சொல்லியே அறிவுறுத்தல் வரும். இதுபோன்ற பெரிய நிகழ்வுகளில் தீவிரத்தன்மை அதிகமாகவே இருக்கும். ஜெனரலாக காலை 6 முதல் மாலை 6 வரை தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றாலும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலெக்டர் அனுமதியுடன் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என விதி இருக்கிறது.
காரணம் என்ன
அங்கு பிணவறையில் அதிகபட்சம் 28 உடல்களை வைத்துக் கொள்ளலாம். அங்கு ஏற்கனவே சில உடல்கள் இருந்தன. அன்றைய தினம் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் வந்தனர். மேலும், ஒரு உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் குறிப்பிட்ட காலம் ஆகும். இதுபோன்ற சூழல்களில் லேட் ஆக ஆக மக்களிடையே பதற்றம் அதிகமாகும்.
இரவு 2 மணிக்குப் பிரேதப் பரிசோதனை தொடங்கப்பட்டாலும் கூட 40 பேரின் உடல்களையும் பிரேதச் சோதனை செய்ய மறுநாள் மாலை 4 ஆகிவிட்டது. காலை 6 மணிக்குப் பிரேதப் பரிசோதனை தொடங்கியிருந்தால்.. மறுநாள் வரை போய் இருக்கும். அப்போது மக்களிடையே வேதனையும் கோபமும் அதிகமாகவே இருக்கும். ஏற்கனவே உறவுகளை இழந்த மக்கள், உடல்கள் கிடைக்காமல் வேதனை அடைவார்கள்" என்றார்.
பவர்கட் இல்லை
முன்னதாக விஜய் பேசும்போது மின்தடை ஏற்பட்டதாகவும் அதுவே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. இருப்பினும், தமிழக மின்வாரியம் அதைத் திட்டவட்டமாக மறுத்தது. விஜய் பேசும்போது மின்தடை எதுவும் ஏற்படவில்லை என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்த ஜெனரேட்டர்களே ஆஃப் ஆனதாக விளக்கம் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், மின்சாரத்தைத் துண்டிக்குமாறு கோரிக்கை வைத்ததே தவெக தரப்பு தான் என்றும் இருப்பினும் அந்தக் கோரிக்கையை மின்வாரியம் மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications