திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலில்.. 'இந்த' விஷயத்தை கவனிச்சீங்களா.. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு
சென்னை: இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் இரண்டு கட்சிகளும் களமிறங்குவதால், ரிஸ்க் எடுக்காமல் மக்கள் செல்வாக்கு உள்ள முகம் தெரிந்த நபர்களையே இரு தரப்பும் பெரும்பாலும் களமிறக்கியுள்ளன.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. கூட்டணியை உறுதி செய்வதில் திமுக, அதிமுக என இரு தரப்பிலும் சற்று குழப்பம் நிலவினாலும், ஒரு வழியாக இரு தரப்பிலும் சுமூகமாகத் தொகுதிப் பங்கீடு முடிந்தது.
அதைத்தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியானது. அதேபோல திமுக வேட்பாளர் பட்டியல் ஒரே கட்டமாக நேற்று வெளியிடப்பட்டது.
பொறுப்பில் உள்ளவர்களுக்கே சீட்
இரு தரப்பிலும் வெளியான வேட்பாளர் பட்டியல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. 177 பேரைக் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலும் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், ஏற்கனவே அமைச்சர் மற்றும் எம்எல்ஏவாக இருந்தவர்களுக்குமே அதிகமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுமுகங்கள் குறைவு
பொதுவாக, ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கப்படும். கட்சியில் எவ்வித பொறுப்புகளும் இல்லாதவர்கள், மக்களுக்குப் பிரபலம் இல்லாத முகங்களுக்கும்கூட சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், இந்த முறை மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்களையே அதிமுக களமிறக்கியுள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியல்
அதேபோல திமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. கடந்த காலங்களில் திமுக வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். இதனால் கட்சிக்காக உழைப்பவர்கள், நீண்ட அனுபவம் உள்ள மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படும். ஆனால் இந்த முறை வாரிசுகளுக்குக் குறைவாகவே சீட்டுகளே வழங்கப்பட்டுள்ளது.
வாரிசுகளுக்கு கம்மி
திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். பழனி தொகுதியில் ஐ. பெரியசாமி மகன் ஐபி செந்தில்குமார், வில்லிவாக்கம் தொகுதியில் க. அன்பழகன் பேரன் வெற்றியழகன், ஆலங்குளம் தொகுதியில் ஆலடி அருணா மகள் பூங்கோதை எனக் குறைவான வாரிசுகளுக்கே இந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கள நிலவரம்
பொன்முடி மகன், கே.என். நேரு மகன் ஆகியோரும் விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்தபோதும், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் இருந்ததைப் போல இல்லாமல், இந்த முறை யாருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது, யார் களத்தில் ஆக்டிவாக உள்ளனர் என்பதையெல்லாம் ஆராய்ந்து ஐ பேக் நிறுவனம் ஒரு அறிக்கையை அளித்திருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே, திமுக தனது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
காரணம் என்ன
அதாவது இரண்டு கட்சிகளிலும் பிரபலமான, ஏற்கனவே மக்கள் செல்வாக்கு உள்ளவர்களுக்கே அதிகம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பிலும் அதற்கான காரணங்கள் உள்ளன. 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிமுக ஆளும்கட்சியாக இருப்பதால் மக்களிடையே எதிர்ப்பு மனநிலை எழுவதும் இயல்பானது. அதையும் தாண்டி வெற்றிபெற்ற வேண்டும் என்பதால் அதிமுக தெரிந்த முகங்களைக் களமிறக்கியுள்ளது. அதேபோல வழக்கமாக வாரிசுகளுக்குச் சீட்டுகளை வாரி வழங்கும் திமுகவும் 10 ஆண்டுகளுக்குப் பின், ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் களத்தில் நிற்பவர்களுக்கு அதிக சீட்டுகளை வழங்கியுள்ளது.