பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசி செலுத்திய தன்னார்வலர் பலி.. வெளிப்படையாக தெரிவிக்காதது ஏன்? சர்ச்சை
சென்னை: கோவேக்சின் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட தன்னார்வலர் உயிரிழந்த தகவலை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தது மருத்துவ வல்லுனர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் அமைப்புடன் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு ஊசியை தயாரித்து வருகிறது. இதற்கு கோவேக்சின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட டிரையல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஆனால், இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. இன்னும் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவடையாத நிலையில், இவ்வாறு அனுமதி கொடுத்ததற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சில மருத்துவ வல்லுனர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தடுப்பூசி பணிகள் .
ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில், கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மூன்றாவது கட்ட டிரையலில் பங்கேற்ற போபால் நகரை சேர்ந்த ஒரு தன்னார்வலர் (தீபக் மராவி, வயது 42) பலியானதாகவும், ஆனால் அது தடுப்பூசி போட்ட 9வது நாள் நடைபெற்ற சம்பவம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. .
ஊடகத்தில் வெளியான செய்தி ..
.7 நாட்கள்வரை தொடர்ந்து தங்கள் கண்காணிப்பில் இருந்ததாகவும், தன்னார்வலர் இறப்பதற்கு தடுப்பூசி காரணம் இல்லை, விஷம் காரணமாக இதயம் செயலிழந்து அவர் பலியானதாக பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்புதான் இந்தியாவில் நடக்க கூடிய தடுப்பூசி டிரையல்களை மேற்பார்வை செய்யக்கூடிய அமைப்பாகும். தன்னார்வலர் ஒருவர் பலியான நிலையில் அதுபற்றி வெளிப்படையாக அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை. வெள்ளிக்கிழமை என்டிடிவி என்ற ஊடகத்தில் தன்னார்வலர் உயிரிழந்த செய்தி வெளியானது. தன்னார்வலர் மகன்தான் இந்த தகவலை வெளியே சொல்லியிருந்தார். அதன்பிறகுதான் பாரத் பயோடெக் நிறுவனம் இப்படி ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. ஒருவேளை செய்தி வெளியாகாமல் இருந்திருந்தால், இந்த தகவல் உலகத்திற்கு தெரியாமல் போய் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. .
தடுப்பூசிக்கு அவசரம்
இதுபற்றி மும்பையைச் சேர்ந்த இந்திய மெடிகல் எதிக்ஸ் ஜர்னல் எடிட்டர் மற்றும் மூத்த மருத்துவரான அமர் ஜேசானி கூறுகையில், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு கொரோனா தடுப்பூசி தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்த தகவலை தெரிந்துதான் வெளியே தெரியாமல் மறைத்து உள்ளதோ என்று கருதுகிறோம். இந்த தடுப்பூசி அனுமதிக்கு தாமதமாகி விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு அவர்கள் செய்திருக்கக் கூடும் என்கிறார்.
எந்த வகை ஊசி என்பது தெரியாதாம்
அதேநேரம் பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தங்களது தன்னார்வலர்கள் பலியான விவகாரம் பற்றி விரிவாக விசாரணை நடத்தியதாகவும், தடுப்பூசியினால் அவர் உயிரிழக்கவில்லை என்பதை உறுதியாகச் சொல்வதாகவும் கூறியுள்ளது. விரிவாக விசாரித்து விட்டதாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறினாலும் கூட, உயிரிழந்த தன்னார்வலர் தடுப்பூசி பெற்றவரா அல்லது டம்மி மருந்து பெற்றவரா என்ற தகவல் தங்களிடம் இல்லை என்று தெரிவிக்கிறது. டம்மி மருந்து என்பது தன்னார்வலர்களில் பாதிக்கு பாதி பேருக்கு கொடுக்கப்படுவதாகும். இப்படித்தான் இருவகைகளில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரிவாக விசாரணை நடத்தியதாக கூறிவிட்டு எந்த வகை தடுப்பூசியை தன்னார்வலர் போட்டுக் கொண்டார் என்பது கூட பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு தெரியாமல் இருப்பது சரியல்ல என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
பொது வெளியில் வையுங்கள்
எந்த தடுப்பு ஊசி போட்டார் என்பதே தெரியாமல் இருக்கும்போது, இந்த சோதனையின் காரணமாக அவர் பலியாக வில்லை என்பதை எப்படி மருந்து நிறுவனம் உறுதியாகச் சொல்கிறது என்று கேட்கிறார் அமர் ஜேசானி. மங்களூரின், யெனெபோயா மருத்துவக் கல்லூரி, பயோஎதிக்ஸ் நிபுணரும் துணை பேராசிரியருமான அனந்த் பன், இதுபற்றி கூறுகையில், பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரோஜெனிகா இணைந்து தயாரித்த தடுப்பூசி பரிசோதனையின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறி சில காலம் தடுப்பூசி பரிசோதனை முயற்சி நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் நமது நாட்டில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது பற்றிய தகவல்கள் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும். எந்த மாதிரியான நடைமுறைகளை நிறுவனம் பின்பற்றுகிறது என்பது தெரிய வேண்டும். இந்த பரிசோதனை தொடர வேண்டுமா, தொடக்கூடாதா என்பது அதன் பிறகுதான் முடிவு செய்யப்பட வேண்டும், என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆய்வு தேவை
ஏற்கனவே 12 நகரங்களை சேர்ந்த 24 ஆயிரம் மக்கள் கோவேக்சின் தடுப்பூசி அல்லது டம்மி ஊசிகளை பெற்றுள்ளனர். இதனிடையே, அமர் ஜேசானி, மேலும் கூறுகையில், வழக்கமான பிரேத பரிசோதனைக்கும், கிளினிகல் டிரையலில், பங்கேற்ற ஒருவரின் பிரேத பரிசோதனைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வழக்கமான பிரேத பரிசோதனையால், இந்த விஷயத்தில் சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு எந்த மாதிரி பதில் தெரிவிக்க போகிறது என்பது தெரியவில்லை.