கவனிச்சீங்களா? வாழ்த்து கூட சொல்லாத கமலாலயம்.. "சும்மா இருங்க".. உத்தரவிட்ட எடப்பாடி! என்ன நடந்தது?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுக்குழு தேர்ந்தெடுத்ததற்கு பாஜக தரப்பில் இருந்து யாரும் எடப்பாடிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. பாஜகவின் இந்த மௌனம் தமிழ்நாடு அரசியலில் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நேற்று முதல்நாள் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இடைக்கால பொதுச்செயலாளர் என்றாலும் 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் எடப்பாடி போட்டியிட்டு நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலும் அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு பாமக ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுக்குழு தேர்ந்தெடுத்ததற்கு பாஜக தரப்பில் இருந்து யாரும் எடப்பாடிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. அதிமுக - பாஜக நட்பாக இருந்தாலும் இன்னும் பாஜக தரப்பில் இருந்து எடப்பாடிக்கு வாழ்த்து வரவில்லை. பாஜகவின் இந்த அமைதிக்கு பின் வேறு காரணங்கள் இருக்கிறதாம். பாஜகவின் தேசிய தலைமையை பொறுத்த வரை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்த அதிமுகவைத்தான் எதிர்பார்க்கிறது என்கிறார்கள்.

பாஜக
காரணம், ஓபிஎஸ்சை கட்டுப்படுத்த இபிஎஸ்சையும், இபிஎஸ்சை கட்டுப்படுத்த ஓபிஎஸ்சையும் பயன்படுத்துவதற்காகத்தான். அதோடு அதிமுகவில் இரட்டை தலைமை இருப்பது ஒரு வகையில் பாஜகவிற்கு பலம் சேர்க்கும். வலிமையாக ஒற்றை தலைமை ஒருவர் வந்து, அவர் அதிமுகவின் முகமானால் அது பாஜகவிற்குத்தான் சிக்கல். தமிழ்நாட்டில் அதிமுக இடத்தை பிடிக்க முயலும் பாஜகவிற்கே அது பின்னடைவை ஏற்படுத்தும்.

அதிமுக இடம்
இதன் காரணமாகவே ஓபிஎஸ் - இபிஎஸ் இரண்டு பேரும் தலைமையில் இருக்க வேண்டும் என்று பாஜக நினைத்ததாக கூறப்படுகிறது. இப்போது ஒற்றை தலைமைக்கு வாழ்த்து சொல்லாமல் பாஜக மௌனம் காக்கவும் இதுவே காரணம் என்கிறார்கள். இது ஒரு புறமிருக்க, கட்சியில் தனக்கான ஆதரவை ஓபிஎஸ் வளர்த்துக் கொள்ளவில்லை அல்லது உருவாக்கவில்லை என்கிற கோபமும் பாஜகவிற்கு ஓபிஎஸ் மீது இருக்கிறதாம்.

ஓபிஎஸ் - இபிஎஸ்
அரசியல் கட்சிகளில் திருத்தங்கள், மாற்றங்கள் குறித்து அங்கீகரிக்க வேண்டியது தலைமைத் தேர்தல் ஆணையம் தான். ஆணையத்தை பொறுத்துவரை பொதுக்குழுவின் முடிவு, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் ஆதரவு யார் பக்கம் இருக்கிறாதோ அவர்களைத்தான் அங்கீகரிக்கும். அந்த வகையில், என்னதான் பாஜக டெல்லியில் பவர் புல்லாக இருந்தாலும் ஓபிஎஸ்சுக்கு பெரிதாக டெல்லி தரப்பில் இருந்து உதவ முடியாது. பொதுக்குழு உள்ளிட்ட சில முக்கிய விசயங்களை தனக்கு ஆதரவாக ஓபிஎஸ் உருவாக்கிக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் பாஜகவுக்கு இருக்கிறதாம்.

இரட்டை தலைமை
அதாவது பாஜகவே நினைத்தாலும் இரட்டை தலைமையை தொடர வைப்பது கொஞ்சம் கஷ்டம் என்ற நிலைதான் இருக்கிறது. இதனால்தான் ஒற்றை தலைமை வந்த பின்பும் பாஜக அதை வாழ்த்தி அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக ஒற்றை தலைமைக்கு கீழ் போனால்.. எங்கே அதிமுக இடத்தை பாஜக பிடிக்க முடியாதோ என்று அக்கட்சி நினைக்கிறதாம்.

அதிமுக அப்செட்
பாஜக இப்படி வாழ்த்து தெரிவிக்காமல் மௌனம் காப்பதை அதிமுகவில் சிலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எடப்பாடி பக்கம் இருக்கும் சட்டரீதியிலான நியாயங்களை மோடியும் அமித்சாவும் உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பதே அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதங்கமாக இருக்கிறதாம். இதனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலர், 'ஜனாதிபதி தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கவும் ஆலோசனை செய்து வருகிறார்களாம்.

கிராஸ் வாக்கு
பாஜக நமக்கு ஆதரவாக இல்லாத போது அவர்களுக்கு எதற்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்? அதனால், எதிர்த்து வாக்களிக்கலாம் அல்லது தேர்தலை புறக்கணிக்கலாம். ஜனாதிபதியாக யார் ஜெயித்தால் நமக்கென்ன? 'என்று எடப்பாடியை வலியுறுத்தி வருகிறார்களாம். எடப்பாடியோ, அமைதியாக இருங்கள் ; தேர்தல் நடக்கும் சமயத்தில் முடிவு எடுத்துக் கொள்ளலாம்'' என்று சொல்லியிருக்கிறாராம். ஆக, ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்திலிருந்து கிராஸ் ஓட்டுகள் விழ நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்கிற பேச்சு அதிமுகவில் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications