தமிழ்நாட்டு பெண்ணை துண்டு துண்டா வெட்டிப் போட்டாங்களே.. எங்க போனீங்க? - அர்ஜுன் சம்பத் ஆவேசம்!
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை கேரளாவில் நரபலி கொடுத்து 60 துண்டுகளாக வெட்டிப் போட்ட சம்பவத்தை ஏன் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை என திமுகவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் அர்ஜுன் சம்பத்.
மேலும், தமிழகத்தில் ஈவேரா பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடிய போது தான் தென்காசி அருகே பட்டியலின மக்கள் வாழும் ஊரையே ஒதுக்கி வைத்திருக்கும் சம்பவம் நடந்துள்ளது எனச் சாடியுள்ளார்.
54 பீஸ்கள்.. கொடூர நரபலி.. பத்மாவிற்காக தமிழ்நாட்டில் துடித்த
திணிக்கப்படாத இந்திக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டம் வெறும் மக்களை திசை திருப்பும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கேரளா நரபலி
சமீபத்தில் கேரள மாநிலத்தில், தமிழகத்தின் தருமபுரியைச் சேர்ந்த பெண் உட்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களை கொடூரமான முறையில் சிதைத்து நரபலி கொடுத்துக் கொன்ற விவகாரத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு, கொலையாளிகள் அதனை சமைத்து சாப்பிட்டதாகவும் பகீர் தகவல் வெளியானது.
வாய்திறக்கவில்லை
நாட்டையே உலுக்கிய இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து திமுகவோ, அதன் கூட்டணி கட்சிகளோ வாய்திறக்கவில்லை என இந்து மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் நரபலி கொடுக்கப்பட்டது பற்றி வாய் திறக்காமல் இருக்கும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இல்லாத ஒன்றை இந்தி திணிப்பு எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் அங்கே
மேலும், "தமிழகத்தில் ஈவேரா பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடுகின்றனர். அப்படி திமுகவினர் அதை கொண்டாடிய போது தான் தென்காசி அருகே பட்டியலின மக்கள் வாழும் ஊரையே ஒதுக்கி வைத்திருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு கடையில் தின்பண்டங்கள் கூட தரமுடியாது என மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி தீயாகப் பரவியது.
திசைதிருப்ப
கேரளாவில் ஒரு தமிழ் பெண் உட்பட 2 பெண்கள் நரபலி என்ற பெயரில் 60 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொடுமை 10 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. ஆனால் இதுவரை திமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். இது அனைத்தும் வெறும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகத் தான்" என அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.