பஞ்சாயத்து! அவமானப்படுத்தப்பட்ட ஓபிஎஸ்! உள்ளே புகுந்த பாஜக! எடப்பாடி - பன்னீருடன் அண்ணாமலை சந்திப்பு
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது பாஜக தரப்பு மத்தியசம் பேச வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன், பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு நடத்தி வருகிறார்கள். பாஜக சீனியர் தலைவர் சி.டி.ரவியும் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு நடத்தி வருவதால் இந்த கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இன்று நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொள்ளாதது மட்டும்தான் மிச்சம். மற்றபடி அதிமுக பொதுக்குழுவில் சின்ன சிவில் வாரே இன்று நடந்து முடிந்துவிட்டது.
உயர் நீதிமன்ற அனுமதியோடு.. வேறு புதிய தீர்மானம் நிறைவேற்ற கூடாது என்ற கட்டுப்பாட்டோடு இன்று பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
அடித்து ஆடும் எடப்பாடி பழனிச்சாமி.. 30, 15 எல்லாம் இல்லை! தனிமரமான ஓபிஎஸ்! உச்சகட்ட பரபரப்பு
பொதுக்குழு நிராகரிப்பு
23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு இன்று பொதுக்குழு கூட்டப்பட்டது. ஆனால் மொத்தமாக பொதுக்குழு அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துள்ளது. அதோடு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், உண்மையான பொதுக்குழு ஜூலை 11ம் தேதிதான் கூடும்., ஒற்றை தலைமை பற்றி இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பின்னடைவு
இன்று அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டார். அவரை வரவேற்க ஆட்கள் இல்லை. மேடையில் ஏறிய எடப்பாடியை வெளியே போயா என்று கூறி கோஷம் எழுப்பினார்கள். அதோடு அவரின் கார் பஞ்சர் செய்யப்பட்டது. அவர் மீது வாட்டர் பாட்டில் கூட வீசப்பட்டது. அந்த அளவிற்கு மோசமாக அவமானப்படுத்தப்பட்ட நிலையில், இறுகிய முகத்தோடு பாதியில் ஓ பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்து கிளம்பி சென்றார்.
பாஜக
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது பாஜக தரப்பு மத்தியசம் பேச வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலையே இது தொடர்பாக ஆலோசனை செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. அதாவது எடப்பாடி - ஓபிஎஸ் இடையே சமரசம் செய்ய பாஜக முயலும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை வருகை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அறிவிப்பு
ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் பற்றி இதில் பஞ்சாயத்து பேசப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் இன்னும் சிலர் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.. அவரை தொடர்ந்து ஓபிஎஸ்ஸை அண்ணாமலை, சிடி ரவி இருவரும் நேரில் சந்தித்தனர். ஓபிஎஸ் - இபிஎஸ் இடையில் சமரசம் பேசும் வகையில் இந்த சந்திப்பு நடப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், பிரச்னையை சுமுகமாக முடிக்க டெல்லி பாஜக களமிறங்கி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக தரப்பினர்
ஆனால் சில பாஜக தரப்பினரோ, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு அதிமுக ஆதரவை வேண்டியே இந்த சந்திப்பு நடத்தப்படுவதாக கூறியுள்ளனர். அதனால்தான் இரண்டு பேரையும் பாஜக நிர்வாகிகள் சந்தித்தாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உட்கட்சி விவகாரம் அது. அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட்டது இல்லை. இனி தலையிடவும் மாட்டோம்.
தலையீடா?
அவர்களே கட்சி ரீதியாக முடிவுகளை எடுக்கட்டும் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இதனால் பாஜக இதில் இந்த முறை எந்த தலையீடுகளையும் செய்யாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த சந்திப்பு திடீரென நடந்துள்ளது கேள்விகளை எழுப்பி உள்ளது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் சரி. ஒற்றை தலைமை கோரிக்கை சரிதான் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.