களை எடுக்கணும்.. தகித்த துரை வைகோ! நல்லா பார்த்துக்கோங்க.. ஸ்டாலின் கையை பிடித்த வைகோ! என்னாச்சு?
சென்னை: மதிமுக கட்சியின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று துரை வைகோ மற்றும் வைகோ இருவரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன.
மதிமுக தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
நேற்று நடந்த 28வது பொதுக்குழு கூட்டத்தில், வைகோவிற்கு நெருக்கமாக கருதப்பட்ட நிர்வாகிகளும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மதிமுக பொதுக்குழு
முக்கியமாக வைகோவிற்கு நெருக்கமாக கருதப்பட்ட அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் திருவள்ளூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் மதிமுகவின் மூத்த நிர்வாகிகளாக மதிக்கப்படும் அழகு சுந்தரம், நாகை மோகன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

சந்திப்பு
இந்த நிகழ்வில் பேசிய மதிமுகவின் புதிய தலைமை கழக செயலாளர் துரை வைகோ, கட்சியை வழி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பொறுப்பு மிகப்பெரியது. அதை திறம்பட செய்வேன் என்று நம்புகிறேன். என்னை ஆதரித்த எல்லோருக்கும் நன்றி. மதிமுக என்ற பயிரில் களை உருவாகி விட்டது. அந்த களையை களைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாதி களையை எடுத்துவிட்டோம், மீதி களையை எடுப்போம் என்று துரை வைகோ குறிப்பிட்டார்.

ஸ்டாலின் மீட்டிங்
இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் முடிந்து நேற்று மதிமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். வைகோ, துரை வைகோ , மல்லை சத்யா உள்ளிட்டோர் நேற்று ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலினிடம் அறிமுகம் செய்து வாழ்த்து பெறும் வகையில் இந்த சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. துரை வைகோ முதல்வர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்து பெற்றார்.

வைகோ
அப்போது வைகோவை பார்த்த முதல்வர் ஸ்டாலின், நல்ல முடிவு,.. கட்சியில் நிலவும் பிரச்சனைகள் பற்றி கவலைப்பட வேண்டாம். அதெல்லாம் சரியாகிவிடும். கட்சியை வழிபடுத்துங்கள். துரை வைகோ நன்றாக செயல்படுவார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நன்றாக வேலை செய்யுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின், அவரிடம் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பில் வைகோ கொஞ்சம் நெகிழ்ச்சியான முகத்தோடு காணப்பட்டார்.

தனியாக மீட்டிங்
இதையடுத்து நிர்வாகிகளை வெளியே அனுப்பிவிட்டு, வைகோ முதல்வர் ஸ்டாலினை தனியாக சந்தித்தார். அப்போது.. துரை வந்துட்டாரு.. இனி அவர்தான் கட்சியை பார்த்துப்பார். எனக்கு வயசு ஆகிடுச்சு. முன்னை மாதிரி இறங்கி பணிகளை செய்ய முடியவில்லை. நீங்கதான் அவரை பார்த்துக்கணும். நீங்கதான் அவரை ஆதரிக்கணும். திமுக போன்ற கட்சியின் ஆதரவு அவருக்கும், மதிமுகவிற்கும் இருக்க வேண்டும் என்று உருக்கமாக ஸ்டாலின் கையை பிடித்துக்கொண்டு வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications