"சரவெடி".. ஓபிஎஸ் திடீரென சமாதானமாக செல்ல முயல்வது ஏன்? பின்னணியில் "மாஸ்டர் பிளான்".. என்ன ஆகும்?
சென்னை: அதிமுகவில் பிரிந்த தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. எல்லோரும் அதிமுகவினர் ஒற்றுமையாக செயல்பட விரும்புகிறார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் இப்படி அழைப்பு விடுக்க பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் நேற்று வென்றார். ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் பயணித்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது. அதிமுக எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஜூலை11 அதிமுக பொதுக்குழு செல்லாது சென்னை ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு
அழைப்பு
எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றுபட்ட போது அதை வீழ்த்த இயலவில்லை என்பது நிரூபணம். நாம் ஒன்றாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். அப்படி இல்லாமல் போனதால்தான் திமுக வென்றது. நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். கடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட விரும்புகிறார்கள். அதிமுகவில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அதிமுக ஒன்றுபடுவதே அனைவரது விருப்பமாக இருக்கிறது, என்று கூறினார்.
காரணம் என்ன?
ஓ பன்னீர்செல்வம் இப்படி அழைப்பு விடுக்க பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பின் அவரின் வேறு ஒரு திட்டமும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
பன்னீர்செல்வம் இப்படி பேச முதல் காரணம், அதிமுகவில் சட்ட ரீதியாக தனக்கு சாதகமான சூழ்நிலை நிலவினாலும், கட்சி ரீதியாக பலம் இல்லை என்பதால்தான் என்கிறார்கள். சட்ட ரீதியாக விதிகள் அவர் பக்கம் இருந்தாலும், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பண பலம் அவர் பக்கம் இல்லை. இதனால் சட்டம் தன் பக்கம் இருக்கும் போதே நிர்வாகிகளை ஒன்று சேர்த்துவிடலாம் என்று அவர் நினைக்கிறார் என்கிறார்கள்.
காரணம் 2
அதாவது நான் கேசில் வென்றாலும் உங்களை அழைக்கிறேன்.. வாருங்கள் சேரலாம் என்பது போல அவர் பெருந்தன்மையாக கூப்பிடுகிறார். ஆனால் அவருக்கு உண்மையில் நிர்வாகிகள் ஆதரவு இல்லாததே இதற்கு காரணம் இப்படி சமாதானம் பேச காரணம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் இப்படி சமாதானம் பேசுவதன் மூலம் கட்சிக்குள் மீண்டும் ஒரு பொதுக்குழு நடத்தாமல் தடுக்க முடியும் என்று அவர் நம்புவதாக கூறப்படுகிறது. கோர்ட் உத்தரவின்படி பொதுக்குழுவில் 5ல் ஒரு பங்கு நபர்கள் கோரிக்கை வைத்தால் அதை ஏற்றுக்கொண்டு ஒரு ஆணையர் மேற்பார்வையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது .
ஏன் அழைக்கிறார்
அப்படி இருக்கும் போது பொதுக்குழுவில் 5ல் ஒரு பங்கு நபர்கள் கோரிக்கை வைத்தால் ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற நிலை ஏற்படும். அப்படி ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவே தற்போது ஓபிஎஸ் சமாதான தூது விடுகிறார். கட்சிக்குள் பிளவு இருந்தால் மீண்டும் தனக்கு சிக்கல் வரும் என்பதை உணர்ந்து கொண்டு அவர் இப்படி செயல்படுகிறார் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர். இதற்கு பின் அவரின் வேறு ஒரு திட்டமும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
காரணம் 3
அதன்படி எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் எடப்பாடிக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை. அவர் சசிகலாவிற்கும் அழைப்பு விடுகிறார். நேற்றே இதை பேட்டியில் அவர் உறுதி செய்தார். சசிகலாவை கொண்டு வந்தால் அதிமுகவில் எடப்பாடிக்கான ஆதரவை குறைத்து கட்சியை அவருக்கு கீழ் கொண்டு செல்லலாம். இதன் மூலம் தான் பாதுகாப்பாக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
சசிகலா
கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். வெளியே சென்றவர்களும் திரும்பி வர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் இதை சுட்டிகாட்டித்தான் சொல்கிறார். இப்போது கட்சியில் ஒருங்கிணைப்பாளராக அவர் இருக்கிறார். இதன் மூலம் சசிகலாவை எப்படியாவது உள்ளே கொண்டு வர வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அவரின் மாஸ்டர் பிளான் இதுதான். அவரின் செயல்பாடுகளும் அதை நோக்கி இருக்கின்றன என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.