வாக்குச்சீட்டில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல்.. EVM இயந்திரங்களை பயன்படுத்தாது ஏன் தெரியுமா?
சென்னை: இன்று நடைபெறும் இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அல்லாமல் பழைய வாக்குச்சீட்டு முறையின் அடிப்படையில் நடக்கிறது. இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. ஏன் என்று விரிவாக காண்போம்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி இன்று நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

வாக்குச் சீட்டு முறை
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குச்சீட்டு முறைபடி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக மக்களவைத் தேர்தல்கள் 127 சட்டப்பேரவைத் தேர்தல்கள், பல மாநிலங்களின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் மட்டும் ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தாமல் வாக்குச் சீட்டு முறையை பின்பற்றுகிறார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்துவரை நேரடி தேர்தல்களுக்காக வடிவமைக்கப்பட்டவை. அதாவது மக்களே நேரடியாக தங்களுக்கு விருப்பமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது வார்டு கவுன்சிலர்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்வு செய்யலாம். தங்களுக்கு விருப்பமான வேட்பாளர் பெயர், சின்னத்துக்கு நேராக இருக்கும் பட்டனை வாக்காளர்கள் அழுத்தமுடியும். இதில் அதிக வாக்குகளை பெறுபவர் வெற்றிபெறுவார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் அந்த முறையில் நடத்தப்படுவது இல்லை. இதில் மக்களால் நேரடியாக வாக்குகளை செலுத்த முடியாது. சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களே இதில் வாக்குகளை செலுத்த முடியும். மக்களின் பிரதிநிதியாக அவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள். அண்மையில் அறிவிக்கப்பட்ட இளையராஜா போன்ற நியமன எம்.பிக்கள் இதில் வாக்களிக்க முடியாது.

விகிதாச்சார முறை
ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்குமான வாக்குகளின் பலம் அம்மாநில மக்கள் தொகை அடிப்படையில் வேறுபடும். ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையை ஆயிரத்தால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் தொகையே அம்மாநில எம்.எல்.ஏக்கள் பலம். உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் எம்.எல்.ஏவின் மதிப்பு 176 ஆக உள்ளது. அதே நேரம் உத்தரப்பிரதேசத்தில் 208 ஆக இந்த மதிப்பு உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினருக்கான வாக்கு பலம் எம்.எல்.ஏக்களை விட 4 மடங்கு அதிகம். எனவே விகிதாச்சார முறையில் நடத்தப்படும் இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியாது.












Click it and Unblock the Notifications