அவசர அவசரமாக டெல்லி பறந்த ஆளுநர் ரவி.. அமித்ஷாவை இன்றே சந்திக்கிறார்..அதென்ன ஃபைல்கள்.. ஹாட் தமிழகம்
ஆளுநர் ரவி இன்று அமித்ஷாவை நேரில் சந்தித்து முக்கிய விஷயங்களை பேசுகிறார்
சென்னை: ஆளுநர் ரவி இன்று டெல்லி சென்றுள்ள நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அசாதாரண சூழல்கள் நிலவி வருகின்றன.. தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, கைது நடவடிக்கைக்குப் பிறகு பாஜகவினரின் அலுவலகம், இல்லங்கள் தாக்கப்படும் சம்பவம் நடந்தது முதல், பதற்றம் தமிழகத்தை சூழ்ந்துள்ளது..
இதனால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை அவசரக் கடிதம் ஒன்றை 4 நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தார்..

50 இடங்கள்
அந்தக் கடிதத்தில் தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல்களைப் பட்டியலிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதனிடையே, நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தமிழத்தின் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அனுமதி கோரியுள்ளது.. ஆனால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அந்த அனுமதி அவர்கள் கேட்ட தேதியில் மறுக்கப்பட்டுள்ளது..

திருமாவளவன்
ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது சட்டரீதியாக இயங்கக்கூடிய அமைப்பு என்பதால், நிச்சயம் ஊர்வலம் நடத்த அனுமதி கிடைக்கும் என்றே பாஜக தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், திருமாவளவன் தடை கோரி கோர்ட்டுக்கு சென்றதுமே, அவர்மீது கடுமையான ஆத்திரத்தில் பாஜகவும், இந்து மத கட்சிகளும் உள்ளன.. அத்துடன், திருமாவளவன் மற்றும் அவருக்கு ஆதரவாக உள்ள சீமானையும் கண்டித்து, அறிக்கைகளை விடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கொண்டிருக்கிறார்கள் பாஜக தரப்பில்..

அசம்பாவிதங்கள்
மற்றொருபுறம், திமுக அரசு இந்த விஷயத்தை சட்டரீதியாக அணுகி வருகிறது என்றாலும் அதேசமயம், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடக்கூடாது என்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது.. இப்படிப்பட்ட பரபரப்பான ஒரு சூழலில், இன்றைய தினம் ஆளுநர் டெல்லி சென்றுள்ளார்.. இன்று இரவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது,, தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் அசம்பாவிதங்கள், மற்றும் அசாதாரண சூழல் குறித்து, அமித்ஷாவிடம் ஆளுநர் ரவி விளக்கம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கன்னியாகுமரி
அத்துடன், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, மதுரை ராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பாஜக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள், நிறுவனங்கள், கடைகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், இது சம்பந்தமாகவும் அமித்ஷாவிடம் விரிவாக ஆளுநர் பேச உள்ளார். ஏற்கனவே இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஃபைல்கள்
அந்தவகையில், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்றே தெரிகிறது.. எனினும், தற்சமய அசாதாரண சூழல் தமிழகத்தை நிலவுவதால், அமித்ஷாவிடம் இதுகுறித்து விளக்கம் தருவதுடன், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும் ஆலோசனைகள் மேற்கொள்ளலாம் என்று தெரிகிறது. டெல்லி சென்ற ஆளுநர், வேறு சில பைல்களுடனும் சென்றதாக கூறப்படுகிறது.. எது சம்பந்தமான பைல்கள் என்று தெரியவில்லை என்பதால், அரசியல் கட்சிகளிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது..!












Click it and Unblock the Notifications