அப்பாயிண்ட்மெண்ட் தராத அமித் ஷா.. வாசலிலேயே தடுத்த பாதுகாவலர்- தமிழக எம்பிக்களுக்கு நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாடு எம்பிக்கள் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டும் அவர்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாட்களாக மறுத்து வருகிறார். டெல்லி வட்டாரத்தில் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மாநில அரசு சட்டம் இயற்றி உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவையில் இது தொடர்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். தற்போது நீட் விலக்கு தொடர்பான அரசின் மசோதா ஆளுநர் மாளிகையில் பரிசீலனையில் உள்ளது.
இன்னொரு பக்கம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று இருந்தனர். அங்கு தமிழ்நாடு எம்பிக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதில் பல பரபரப்பு சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.
சீனா அட்டூழியம்! அருணாச்சல பிரதேச மாநில பகுதிகளுக்கு புதிய பெயர்கள்- மத்திய அரசு கடும் கண்டனம்!
டைம்லைன்
தமிழ்நாடு எம்பிக்களின் இந்த டெல்லி பயணம், அவர்களின் சந்திப்பு குறித்த முழு டைம் லைனை இங்கே பார்க்கலாம். கடந்த செவ்வாய் கிழமை தமிழ்நாடு எம்பிக்கள் குழு டெல்லி சென்றது. திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், விசிக தொல். திருமாவளவன், சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் உட்பட தமிழ்நாடு எம்பிக்கள் குழுவாக சென்றுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மறுப்பு
செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க டிஆர் பாலு தலைமையிலான எம்பிக்கள் குழு முயன்றது. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி இந்த சந்திப்பை நடத்தவில்லை. குடியரசுத் தலைவர் தமிழ்நாடு எம்பிக்களை சந்திக்க மறுத்தார். இதனால் வேறு வழியின்றி குடியரசு தலைவரின் செயலாளரிடம் தமிழ்நாடு எம்பிக்கள் நீட் தேர்வு நீக்கம் தொடர்பான மனுவை அளித்தனர்.
அமித் ஷா இல்லை
அதன்பின் 12 மணிக்கு அதே நாளில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க ஏற்கனவே டிஆர் பாலு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தார். ஆனால் எம்பிக்கள் அவரின் டெல்லி அலுவலகம் சென்ற போது அங்கு அமித் ஷா இல்லை. அப்போது அவர் உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் முடித்து திரும்பி வந்து கொண்டு இருந்தார். 2 மணி நேரம் தமிழ்நாடு எம்பிக்கள் காத்து இருந்தும் அமித் ஷா வரவில்லை. இதனால் எம்பிக்கள் எல்லோரும் டி ஆர் பாலு வீட்டிற்கு சாப்பிட சென்றனர்.
1 மணி நேரம்
1 மணி நேரம் கழித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் அமித் ஷாவை பார்க்க தமிழ்நாடு எம்பிக்கள் வந்துள்ளனர். ஆனால் அவர்களை சந்திக்க அமித் ஷா மறுத்துள்ளார். இதற்கான முறையாக காரணம் கூறப்படவில்லை. ஏற்கனவே 4 மணிக்கு திட்டமிட்டு இருந்த மீட்டிங் காரணமாக இந்த சந்திப்பை அமித் ஷா புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
கோபம்
அவர் சொல்லித்தானே வந்தோம்.. இப்போது அப்பாயிண்ட்மெண்ட் இருந்தும் சந்திக்க மறுத்தால் என்ன என்று எம்பிக்கள் முறையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மறுநாள் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுவிட்டு அங்கிருந்து கோபமாக தமிழ்நாடு எம்பிக்கள் கிளம்பி சென்றனர். அதிமுக தொடங்கி அனைத்து கட்சிகளும் சேர்ந்து வந்தும் அமித் ஷா தமிழ்நாடு எம்பிகளை சந்திக்க மறுத்துள்ளார்.
விரைந்தனர்
உச்சகட்டமாக நேற்று மீண்டும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டதற்கு தமிழ்நாடு எம்பிகளுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கூட கொடுக்கப்படவில்லை. சரி அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் வேண்டாம்.. நேராக சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று எம்பிக்கள் குழு ஒற்றுமையாக மீண்டும் அமித் ஷாவின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கே நின்ற காவல் அதிகாரிகள்.. நீங்கள் எம்பிக்களாக இருக்கலாம். உங்களின் கோரிக்கை அவசரம் புரிகிறது.
வாசலில் தடுத்து நிறுத்தம்
ஆனால் protocal படி உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. உங்களிடம் அப்பாயிண்ட்மெண்ட் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் தமிழ்நாடு எம்பிக்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கார்கள் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தது. அங்கு இருந்த தமிழ்நாடு எம்பிக்கள் அமித் ஷாவை நேற்று இரவு சந்திக்க 10 நிமிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அமித் ஷாவிற்கு டிஆர் பாலு போன் செய்து பேசிய போதும் 10 நிமிடம் கூட ஒதுக்க அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
சந்திக்கவே இல்லை
இருப்பினும் தமிழ்நாடு எம்பிக்கள் இரவு 8.40 வரை அவரின் அலுவலகம் முன் காத்து இருந்தனர். கடைசி வரை அமித் ஷாவிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காத காரணத்தால் கொதித்து போன டிஆர் பாலு.. அங்கு இருந்த அமித் ஷாவின் உதவியாளர்களிடம்.. இது என்ன protocal? மக்கள் பிரச்சனையை பேச கூட நேரம் ஒதுக்க முடியாதா என்று உதவியாளர்களிடம் கொதித்ததாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது
தமிழ்நாடு எம்பிக்கள் ஒன்றாக சேர்ந்து சென்றும்.. எல்லோரும் ஒருமித்த குரல் கொடுத்ததும் அவர்களை சந்திக்க அமித் ஷா மறுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக உட்பட எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம், இரண்டு நாட்களாக நேரம் தரவில்லை, என்று டிஆர் பாலு, சு வெங்கடேசன் என்று எல்லோரும் கொதித்து போய் உள்ளனர். இன்று மீண்டும் அமித் ஷாவை சந்திக்க தமிழ்நாடு எம்பிக்கள் முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.