காங்கிரசே அறிவிக்கவில்லை.. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் முன்மொழிந்த பின்னணி என்ன?
Recommended Video

சென்னை: காங்கிரஸ் கட்சியே அறிவிக்கும் முன்பாக, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று முன்மொழிந்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே அவசரமாக இதை செய்ய வேண்டியதன் அவசியம் என்ன வந்தது, என்று அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தான் ஸ்டாலின் இவ்வாறு அறிவித்தார்.

அரசியல் சர்ச்சை
மெகா கூட்டணி என்ற ஒரு முயற்சியை சந்திரபாபு நாயுடு எடுத்து வரும் நிலையில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே, இவ்வாறு திடீரென பிரதமர் வேட்பாளர் இவர்தான் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளது, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் இடையே விவாதப் பொருளாகி உள்ளது. ஸ்டாலின் ஏன் இவ்வாறு முன்மொழிந்தார் என்பது தமிழக அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மோடியா, லேடியா
இதுகுறித்து திமுக வட்டாரத்தில் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, நாடு முழுக்க மோடி அலை வீசியது. தேர்தல் பிரச்சாரம் முடியவிருந்த சூழ்நிலையில், அப்போதைய முதல்வரான ஜெயலலிதா, மோடியா அல்லது லேடியா என்ற முழக்கத்தை முன் வைத்தார். மோடிக்கு எதிராக சிறுபான்மையினரின் வாக்குகளை ஒன்று திரட்டும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது. தேசிய அளவில் மோடிக்கு போட்டியாக, நான் விளங்குவேன் என்பதை தமிழக மக்களுக்கு அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

திமுக தோல்வி
ஜெயலலிதாவின் இந்த யுக்தி பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. கன்னியாகுமரி மற்றும் தருமபுரி ஆகிய இரு தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. மேற்கண்ட இரு தொகுதிகளிலும் முறையே பாஜக மற்றும் பாமக ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. திமுக எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை.

காங்கிரஸ் கூட்டணி
இப்போது மோடிக்கு எதிராக தமிழகத்தில் அலை வீசி கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம், காவிரி, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்ததுதான். ஆதரவு அலையையே, அதையே அறுவடை செய்தவர் ஜெயலலிதா. அப்படி இருக்கும்போது, எதிர்ப்பு அலையை பயன்படுத்தி மோடி எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் திமுகவிற்கு கொண்டுவர வேண்டும் என்றால், திமுக இன்னும் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை இருந்தது.

பல முனை போட்டி
முன்புபோல் இன்றி, இந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் பலமுறை போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது. மோடி எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் வாக்கு அறுவடையில் ஈடுபடக்கூடும். இதை தடுப்பதற்காக, தேர்தலுக்கு முன்போ, அல்லது பின்போ, திமுக, பாஜக பக்கம் செல்லாது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் இருந்தார். எனவே, முன்கூட்டியே காங்கிரஸ் சார்பில் ஸ்டாலின் பேட்டிங் செய்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி உறுதி
இன்னொரு விஷயமும் சுட்டிக்காட்டப்படுகிறது. தொகுதி பங்கீடு பிரச்சினை வருமானால், திமுகவை தவிர்த்துவிட்டு, பிற சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி உள்ளது. அதிலும், 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்போது காங்கிரஸின் கரம் வலுத்துவிட்டது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு திமுக உள்ளாகி உள்ளது. எனவே, பிரதமர் வேட்பாளராக பலரும் ஆசைப்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தி முன்னிறுத்தி கூட்டணி தலைவர் சோனியா காந்தியை மகிழ்ச்சிப்படுத்துவது என்பதும் ஸ்டாலினின் இந்த அறிவிப்பின் ஒரு நோக்கம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எது எப்படியோ இந்த அறிவிப்பின் மூலம், முழுக்க பலன் பெறுவது என்னவோ திமுக மட்டுமே. அந்த வகையில் தனது காய்நகர்த்தலில் ஸ்டாலின் வென்றுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.












Click it and Unblock the Notifications