ஓபிஎஸ் கேட்ட அந்த கேள்வி.. ‘அதோட பேச்சையே காணோம்’.. திரைமறைவில் நடந்தது என்ன? - உடைக்கும் புள்ளிகள்!
சென்னை : அதிமுக இணை பொதுச் செயலாளர் பதவி தருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியும், ஓ.பன்னீர்செல்வம் அதனை ஏற்க மறுத்தது ஏன் என்பது பற்றிய தகவல்கள் ஓபிஎஸ் வட்டாரத்தில் பரபரக்கின்றன.
அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமாக தலை தூக்கிய நேரத்தில், எதிர்ப்புக் குரல் எழுப்பிய ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த ஈபிஎஸ் தரப்பினர் முயற்சி மேற்கொண்டனர்.
திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தை முயற்சிகள், பேரங்கள் பற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணி சமீபத்தில், அதிமுக கூட்டத்தில் போட்டு உடைத்தார். இணை பொதுச் செயலாளர் பதவி தருவதாகச் சொல்லியும் ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை, கட்சியை பிளவுபடுத்த முயற்சித்தார் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பேச்சுவார்த்தையின்போது ஈபிஎஸ் தரப்பு முன்வைத்த பேரங்களும், ஓபிஎஸ் ஏன் ஏற்கவில்லை என்பது பற்றியும் ஓபிஎஸ் வட்டாரத்தில் புதிய தகவல்கள் அலையடிக்கின்றன.
தங்கமணி ஆவேசத்துக்கு மூல காரணமே இதானா..? கொங்கு மண்டலத்தில் 'கொக்கி’ போட்ட ஓபிஎஸ்.. பக்கா மூவ்!
சமாதான பேச்சுவார்த்தை
கடந்த ஜூன் மாதம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவாதத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் 2.0வை தொடங்கிய நிலையில், அவரை சமாதானப்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்க ஈபிஎஸ் தரப்பினர் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர். ஈபிஎஸ் ஆதரவாளர்களான மாஜிக்கள் பலர் ஓபிஎஸ்ஸோடு பேசினர். அப்போது, சில பேரங்களையும் முன்வைத்ததாக கூறப்பட்டது. அந்த பேரங்களைத்தான் அதிமுக கூட்டத்தில் போட்டு உடைத்தார் தங்கமணி.
ஓபிஎஸ் உடன் பேரம்
நாமக்கல்லில் சமீபத்தில் பேசிய தங்கமணி, "நாம் ஆட்சியில் இருக்கும்போதே தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை அழைத்து துணை முதல்வர் ஆக்கினோம். இரட்டைத் தலைமை இருப்பதால்தான் நம்மால் விரைந்து முடிவு எடுக்க முடியவில்லை என்று எல்லோரும் பேச தொடங்கியதால் ஒற்றை தலைமை வேண்டும் என்று முடிவு எடுத்தோம். பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு எல்லோரும் ஆதரவு கொடுத்தனர். இணை பொதுச்செயலாளர் பதவி தருகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினோம். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஓபிஎஸ் அவர் மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டார். அதையும் தருகிறேன் என ஈபிஎஸ் சொன்னார். அதன் பிறகும் ஓபிஎஸ் ஒத்துவராததால் பேச்சுவார்த்தையை கைவிட்டு விட்டோம்." எனப் பேசினார்.
மீண்டும் அடிக்கும் புயல்
தங்கமணியின் இந்தப் பேச்சு அதிமுகவில் மீண்டும் புயலைக் கிளப்பியது. தனது மகனுக்கு ஓபிஎஸ் அமைச்சர் பதவி கேட்டார், இணை பொதுச்செயலாளர் பதவியை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றெல்லாம் திரைமறைவில் நடந்த விஷயங்களை கூட்டத்தில் வைத்து தங்கமணி பேசியது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஜெசிடி பிரபாகர் ஈபிஎஸ் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்து, 41,000 கோடி ரூபாய் ரகசியம் என்றெல்லாம் பேசி பரபரப்பைக் கிளப்பினார்.
ஏன் ஓபிஎஸ் ஏற்கவில்லை
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஏன் இணை பொதுச் செயலாளர் பதவி கொடுப்பதாக ஈபிஎஸ் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு காரணங்களை அடுக்குகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். சமமான அதிகாரத்தோடு இணை பொதுச் செயலாளர் பதவி அளிக்க ஈபிஎஸ் முன்வந்தார் என்றால், அங்கு ஒற்றைத் தலைமை பிரச்சனையே ஏற்பட்டிருக்காது. ஈபிஎஸ் டீம், திட்டம்போட்டதே ஓபிஎஸ்ஸை டம்மியாக பதவி கொடுத்து அமர வைக்க வேண்டும் என்றுதான், அதனால் தான் ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார்கள்.
ஒற்றை அதிகாரம்
அதாவது, கட்சியில் தனக்கு அதிகாரம், ஆட்சியில் ஈபிஎஸ்ஸுக்கு அதிகாரம் என்ற கோரிக்கையோடு தான் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸோடு தர்மயுத்தத்திற்குப் பிறகு ஒன்றாக இணைந்தார். ஆனால், ஆட்சியில் துணை முதல்வர் பதவி கொடுத்துவிட்டு, கட்சியிலும் இணையான அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் இருவரும் கையெழுத்து போட்டால் தான் செல்லும். ஆனால், சட்டப்படி, துணை முதல்வர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை, அது பொம்மை போஸ்டிங் போல தான். அப்போதே சம உரிமை என்று சொல்லி ஈபிஎஸ் ஏமாற்றிவிட்டார், அதனால் தான் இன்னொரு முறை ஏமாற ஓபிஎஸ் தயாராக இல்லை என்கிறார்கள்.
கையெழுத்து போடும் அதிகாரம்
அதனால், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இணை பொதுச் செயலாளர் பதவி கொடுப்பதாகச் சொன்னதுமே ஓபிஎஸ் கேட்ட முதல் கேள்வி 'கையெழுத்து போடும் அதிகாரம் இருவருக்கும் இருக்குமா?' என்பதுதானாம். ஆனால், ஈபிஎஸ் திட்டமே ஓபிஎஸ்ஸிடம் இருந்து கையெழுத்து போடும் அதிகாரத்தைப் பறிப்பதுதான். அதனால் தான் பேச்சுவார்த்தையில் அதன்பிறகு முன்னேற்றம் ஏற்படவில்லை, ஓபிஎஸ் அப்போது ஈபிஎஸ் தரப்பின் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டிருந்தால் இந்நேரம், கட்சியை தங்கள் முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஓபிஎஸ்ஸை நிச்சயமாக ஓரங்கட்டி இருப்பார்கள்.
பெயரைக் கெடுக்க
இதையெல்லாம் மறைத்துவிட்டு, அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் மீது இருக்கும் நற்பெயரைக் கெடுப்பதற்காக, அவர் பதவி வெறியில் அலைபவர் போலவும், மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்காததால் தான் ஈபிஎஸ்ஸோடு இணைய விரும்பவில்லை என்றும் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர், ஓபிஎஸ்ஸை ஏமாற்றி மொத்த அதிகாரத்தையும் பறிக்கத்தான் ஒவ்வொரு மாஜிக்களாக படையெடுத்து வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அவர் கேட்ட ஒரே பாயிண்டிலேயே பின்வாங்கிவிட்டனர் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.