எடப்பாடி பக்கம் நடையைக் கட்டும் ஆதரவாளர்கள்.. ஓபிஎஸ் பலத்தை இழக்க காரணம் இந்த 3 விஷயங்கள்தான்..!
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த பலர், எதிர் தரப்பான எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவி வருகின்றனர்.
Recommended Video
இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் இந்த மன மாற்றத்திற்கு காரணமாக சில விஷயங்கள் கூறப்படுகின்றன.
அதிமுகவில் சசிகலாவை சேர்க்கலாம் என்ற ரீதியில் ஓ.பி.எஸ் பேசி வருவதும், திமுக அரசை சாஃப்டாக அவர் விமர்சித்து வருவதுமே அவர் மீது ஆதரவாளர்கள் நம்பிக்கை இழந்ததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஒற்றைத் தலைமை
அதிமுகவில் கிளம்பியுள்ள ஒற்றைத் தலைமை முழக்கம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் எனப் பேசியதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இரட்டைத் தலைமையே நீடிக்கும் ஒற்றைத் தலைமைக்கு வாய்ப்பே இல்லை என அவர் அடித்துச் சொன்னார். அதேசமயம் எடப்பாடி தரப்பினரோ, ஒற்றைத் தலைமைதான் அதுவும் எடப்பாடிதான் என உறுதியாக கூறி வருகின்றனர்.

பொதுக்குழு
ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்ற ஈ.பி.எஸ் தரப்பு திட்டமிட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஈபிஎஸ் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்து வருகின்றனர்.

கழன்று ஓடும் ஆதரவாளர்கள்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரது ஆதரவாளர்களையும் தனது பக்கம் இழுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்துவந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேசராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஆதரவளித்துள்ளனர்.

9 பேர் மட்டுமே
தச்சை கணேசராஜாவுக்கு ராஜ்ய சபா தேர்தலில் சீட் பெற்றுத் தர ஓ.பி.எஸ் முயற்சித்ததாக கூறப்பட்டது. கடைசியில் ஆர்.தர்மருக்கு சீட் கிடைத்தது. இந்நிலையில், தச்சை கணேசராஜா எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறியுள்ளார். மாவட்ட செயலாளர்களில் 66 பேர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக உள்ளனர். 9 பேர் மட்டுமே ஓ.பி.எஸ் வசம் உள்ளனர்.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நிற்கிறார். தேனி மாவட்ட செயலாளர் சையது கான், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், கன்னியாகுமரி மா.செ அசோகன், திருவள்ளூர் வடக்கு மா.செ சிறுணியம் பலராமன், திருச்சி மாநகர் மா.செ வெல்லமண்டி நடராஜன், தஞ்சாவூர் வடக்கு மா.செ சுப்ரமணி, பெரம்பலூர் மா.செ ராமச்சந்திரன், அரியலூர் மா.செ தாமரை ராஜேந்திரன் ஆகிய 9 மா.செக்கள் மட்டுமே ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக உள்ளனர்.

காரணம் என்ன?
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் ஆதரவாளர்கள் வெகுவாகக் குறைந்ததற்குக் காரணம் என்ன என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ்ஸின நடவடிக்கைகளால் அவர் மீது நம்பிக்கை இழந்தே எதிர்கால நலன் கருதி முக்கிய நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவால்
சசிகலா தரப்பு மீது குற்றம்சாட்டி தர்ம யுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் எடப்பாடி பழனிசாமியோடு, ஆட்சியையும், கட்சியையும் பகிர்ந்துகொண்டு இணைந்து செயல்பட முடிவெடுத்தார். ஆனால், சமீபகாலமாக ஓ.பி.எஸ், சசிகலா வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி வருவது அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரோகி எனக் குற்றம்சாட்டிய சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கத் துடிப்பது ஓ.பி.எஸ் மீது அவரது ஆதரவாளர்களே நம்பிக்கை இழக்கும் சூழலுக்குத் தள்ளியுள்ளது.

சசிகலா - ஓ.ராஜா சந்திப்பு
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சசிகலாவை சென்று சந்திப்பதும், ஓ.பி.எஸ்ஸின் தம்பியான ஓ.ராஜா சசிகலாவை சென்று சந்தித்ததும் ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவோடு கை கோர்ப்பாரோ என்ற சந்தேகத்தை தொண்டர்கள் மத்தியிலேயே கிளப்பிவிட்டது. இதுவும் ஓ.பி.எஸ் மீது அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடையக் காரணமாக அமைந்து விட்டது.

சாஃப்ட் பாணி
மேலும், திமுக அரசாக இருந்தாலும், எதிர்க்கட்சி தொடர்பான பா.ஜ.கவுடனான பஞ்சாயத்தாக இருந்தாலும் சரி, அவர்களை விமர்சிப்பதில் ஓ.பி.எஸ் மென்மையான பாணியையே கடைபிடித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி அளவுக்கு திமுகவை வலுவாக விமர்சிப்பதில்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் நினைக்கின்றனராம். இதுவும் ஓ.பி.எஸ் பக்கம் அணி சேராததற்கு ஒரு முக்கியமான காரணம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications