லேட்டா கிளம்பிய பிரதமர் மோடி.. ‘நோ சேஞ்ச்’ குறித்த நேரத்தில் தொடங்கிய தமிழக அரசு- பாஜகவினர் கொதிப்பு
சென்னை : பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திற்கு 4.45 மணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதாக புறப்பட்டதால் 5.10 மணியளவில் சென்னை வந்தடைந்தார். அவர் விழா அரங்கிற்குள் வருவதற்குள் கொடி அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்துள்ளன.
சென்னையில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார்.
நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்க இருக்கிறார் பிரதமர் மோடி. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க வருவதையொட்டி விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கம் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது.

பிரதமர் வருகை தாமதம்
பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து இன்று பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.45 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அகமதாபாத்தில் இருந்து 3.10 மணிக்குத்தான் விமானத்தில் புறப்பட்டார் பிரதமர் மோடி. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு சற்று தாமதமாக மாலை 5.10 மணிக்கு வந்தடைந்தார்.

வரவேற்க அமைச்சர்கள் காத்திருப்பு
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தமிழக அரசு சார்பில் தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் மோடி வருகைக்காக காத்திருந்தனர்.

வரவேற்பு ஏற்பாடுகள்
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்திற்குச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கைச் சென்றடைவார். பிரதமர் மோடி செல்லும் வழியெங்கும் பாஜகவினரால் அதகளமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இன்னும் அவர் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்து சேரவில்லை.
Recommended Video

தாமதிக்காமல் தொடங்கியது விழா
பிரதமர் மோடி வருகை தாமதத்தால் தொடக்க விழாவிலும் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி நிரலில் கடைசி நேரத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் கலை நிகழ்ச்சிகளும், கொடி அணிவகுப்புகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. இன்னும் சில நிமிடங்களில் பிரதமர் மோடி விழா அரங்கிற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடுகளின் கொடி அணிவகுப்பு
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ள 186 நாட்டு வீரர் வீராங்கனைகளும் தங்கள் நாட்டுக் கொடியுடன் அணிவகுத்தனர். வீரர்கள் பெருமிதத்தோடு அணிவகுப்பில் கலந்துகொண்டபோது, அரங்கத்தில் அந்தந்த நாடுகளின் கொடிகள் ஜொலித்தன. ஒவ்வொரு நாட்டு வீரர்களையும் அந்தந்த நாடுகளின் பெயர்களோடு பதாகை தாங்கிய தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் வழிநடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி
பிரதமர் மோடி வருவதற்குள் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும், கொடி அணுவகுப்புகளும் நிறைவடைந்துள்ளன. செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி வருவதற்குள் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications