பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்தது ஏன்.. தமிழக அரசு ஹைகோர்டில் விளக்கம்
சென்னை: ஊரடங்கினால், அரசுக்கு ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியை சரி செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிக அவசியம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனோ நோய் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு கடைபிடித்து வரும் சூழலில், பதிவு துறை அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு ஊரடங்கு நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டால், அதை சார்ந்து இயங்கும் பத்திர எழுத்தாளர், ஸ்டாம்ப் விற்பனையாளர்கள், மற்றும் நகல் எடுக்கும் கடைகள் என அனைத்தும் இயங்க வேண்டிய சூழல் உருவாகும்.
இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 578 பதிவுத்துறை அலுவலகங்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து, கண்காணிப்பதும் இயலாதது.
எனவே ஊரடங்கு கடைபிடிக்கும் காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு உள்ளிட்ட பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்க தடை விதிக்க உத்தரவிடக் கோரி செந்தில் வேல்முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள், சத்தியநாராயணன், நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஊரடங்கு நேரத்தில் செயல்பட்டால் கொரொனோ தொற்று பரவ வாய்ப்புள்ளது என பத்திரப்பதிவு எழுத்தாளர் சங்கம் மனு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ஊரடங்கு காரணமாக அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது என்றும் இதை சரி செய்வதற்கும், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் கடன் பெற நிறுவனங்கள் பதிவு செய்வதற்கும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுவது அவசியமானது.
தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ள விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே அனுமதித்து பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் பத்திரப்பதிவு துறை செயல்படுவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதை பத்திரப்பதிவு குறைத்தீர் மையத்திற்கு அளித்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பத்திர பதிவு அலுவலகங்களை திறப்பதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தனர்.