சுயமரியாதை முக்கியம்.. அதிமுகவே ஆடிய போதும்.. அமைதியாக ஒதுங்கிய சசிகலா? - பின்னணியில் என்ன நடந்தது?
சென்னை: அதிமுக கட்சிக்குள் கடந்த ஒரு வாரமாக பெரிய பெரிய களேபரங்கள் நடந்த நிலையில், சசிகலா இது குறித்து எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாகி உள்ளார். சசிகலா மட்டுமின்றி அவரின் மன்னார்குடி சொந்தங்களும் சரி, டிடிவி தினகரனும் சரி.. எல்லோரும் பெருத்த மௌனம் காத்து வருகிறார்கள்.
அதிமுக சார்பாக தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரிய போராட்டத்திற்கு பின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்பிற்கு பின் ஒரு வழியாக நேற்று இபிஎஸ் எதிர்க்கட்சி தலைவராக தேர்வானார்.
ஐஏஎஸ் உதய்சந்திரனுக்கு கல்வித்துறை.. முதல்வரின் 4 செயலாளர்களுக்கு துறை ஒதுக்கீடு.. ஸ்டாலின் அதிரடி!
தேர்தல் முடிந்த உடனேயே அதிமுகவிற்குள் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்யும் மோதல் தொடங்கிவிட்டது. அதன்பின் கடந்த நான்கு நாட்களாக இந்த மோதல் தீவிரமாக இருந்தது.
எப்படி
அதிலும் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அதிமுக மீட்டிங்கில், கட்சி அலுவலகத்திலேயே ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் மெரினாவில் ஜெ. சமாதியில் தொண்டர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பிரச்சனையை தீர்க்கவே முடியாது, அதிமுக கதை எவ்வளவுதான் என்று நினைத்த போதுதான் திடீர் திருப்பமாக இபிஎஸ் எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார்.
2 பேர்
கட்சியின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம் என்று கூறி ஓபிஎஸ் கடுமையான புகார்களை வைத்தும் கூட கடைசி கட்டத்தில், எம்எல்ஏக்கள் பலர் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிக்க முடிவு எடுத்ததால், அவரின் கை ஓங்கியது. 2 எம்எல்ஏக்கள் மட்டுமே ஓபிஎஸ் எதிர்கட்சித் தலைவராக வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வருகிறது. தனக்கு நெருக்கமானவர்களே தன்னை ஆதரிக்கவில்லை என்று ஓபிஎஸ் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
மோசம்
அதிமுகவில் இத்தனை களேபரங்கள் நடந்த போதிலும், எதை பற்றியும் சசிகலா தரப்பு வாயை திறக்கவே இல்லை என்பதுதான் இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம். அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் வெளிப்படையாக தெரிந்த போதிலும் சசிகலா தரப்பு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இதில் மூக்கை நுழைக்கவே இல்லை. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று எம்ஜிஆர் பாட்டை பாடியபடி சசிகலா கேம்ப் அமைதியாக இருந்துள்ளது.
அழைப்பு
அதிமுக மீட்டிங்கில் சிலர் சசிகலா பற்றி பேசினார்கள், வெளியிலும் சசிகலாவை அழைத்து அதிமுக தொண்டர்கள் சிலர் சார்பாக சில போஸ்டர்கள் ஓட்டப்பட்டன. ஆனால் பேச வேண்டிய சசிகலா இதில் எதை பற்றியும் பேசாமல், கடந்த 4 -5 நாள் மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிகின்றன. நாம் இதில் தலையிட வேண்டாம், எதுவும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டு சசிகலா அமைதி காத்ததாக கூறப்படுகிறது.
தினகரன்
தினகரன் தரப்பும் இந்த எதிர்கட்சித் தலைவர் விஷயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்பது போல டிடிவி தரப்பும், அமமுகவும் சைலண்ட்டாகவே இருந்துவிட்டனர். இதெல்லாம் போக சசிகலாவோ ஒருபடி மேலே போய் அடுத்த கோவில் டிரிப் அடிக்க நாள் பார்த்துக் கொண்டு இருக்கிறாராம். அதிமுகவில் இப்போதைக்கு நுழைய முடியாது.
சரியில்லை
சந்தர்ப்பம் சரியில்லை, காத்திருப்போம், காலம் கனியும் என்று சசிகலா அமைதியாக இருப்பதாக மன்னார்குடி குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு நம்மை இப்போது இருக்கும் சிலர் மதிக்கவில்லை.. அவர்களாக நம்மை தேடி வருவார்கள்.. அப்போது பார்த்துக்கொள்ளலாம், நமக்கு சுயமரியாதைதான் முக்கியம்.. என்று சசிகலா கருதுகிறார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதலை விட வேறு சிறந்த வாய்ப்பு சசிகலாவிற்கு கிடைக்காது.
மொத்தமாக சைலன்ட்
இப்படிப்பட்ட நேரத்திலும் கூட அவர் மௌனம் காப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இரண்டு பேரின் மோதலை பயன்படுத்தி கட்சியை வளைக்கும் நல்ல வாய்ப்பை சசிகலா - தினகரன் இரண்டு பேருமே தவற விட்டுள்ளனர் என்றுதான் கூற வேண்டும். அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறிய சசிகலா.. தற்காலிகமாக இல்லாமல்.. மொத்தமாகவே அரசியலில் இருந்து ரிட்டையர் ஆகிவிட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.