தமிழ்த்தாய் வாழ்த்து: நிற்காத சங்கராச்சாரியாரும், நீதிபதி கருத்தும்! அரசு அதிரடி உத்தரவின் பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த ஆணைக்கு பின் முக்கியமான காரணங்கள் சில உள்ளன.
தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும்.
அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ஆணை சொல்வது என்ன?
தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் இந்த ஆணைப்படி, இனி வரும் நாட்களில்தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். அது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டும்.
உத்தரவு
இதில் ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க வேண்டியது இல்லை. அவர்கள் தவிர்த்த அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் என்ன நடந்தது?
சமீபத்திய நாட்களில் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்தது. முக்கியமாக சில விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடபடவில்லை என்று புகார் வைக்கப்பட்டு அது சர்ச்சையானது. சென்னை ஐஐடியில் சமீபத்தில் நடத்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டது.
சங்கராச்சாரியார்
இந்த நிலையில்தான் சமீபத்தில், தமிழ்- சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாக கூறப்பட்டது. இது பெரிய சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சி மாதத்திற்குள் போராட்டமும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் நடந்தது.
உத்தரவு
இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல். தேசிய கீதம் அல்ல. அதற்கு கட்டாயம் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அது தொடர்பாக உத்தரவும் எதுவும் இல்லை.
உத்தரவு இல்லை
தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவு இல்லை. அதே நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மிக உயர்ந்த மரியாதை வழங்கப்பட வேண்டும்.
பலர் எழுந்து நிற்கிறார்கள்
ஆனால் உண்மையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது கூட்டத்தினர் எழுந்து நிற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏன் எழுந்து நிற்க வேண்டும்? இப்படித்தான் நம் தமிழ்த்தாய்க்கு மரியாதை செலுத்த வேண்டுமா என்று நீதிபதி சுவாமிநாதன் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன்பே சங்கராச்சாரியார் இப்படி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
ஆம் இதேபோல் கடந்த 2018ல் சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு சங்கராச்சாரியார் விஜயேந்திரர் வந்து இருந்தார். அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் இந்த விழாவிற்கு வந்து இருந்தார். இதில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது அதற்கு சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்துநிற்கவில்லை. அப்போதே இது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்தார்
இந்த நிலையில் சமீபத்தில், திருப்பரங்குன்றத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்றார். அவர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என சட்டரீதியான உத்தரவு இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் எனக்கு தமிழ் பிடிக்கும். நான் எப்போதும் போல எழுந்து நின்று மரியாதை செய்வேன் என்று குறிப்பிட்டார். இது பெரிய வரவேற்பை பெற்றது.
Recommended Video
கட்டாயம்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இனி கட்டாயம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும். இல்லையென்றால் வழக்கு பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.