லட்டு மாதிரி பிளான் போடும் திமுக.. "சைலண்ட்" அன்வர் ராஜா.. விழிபிதுங்கும் அதிமுக.. லிஸ்ட்டில் 3 பேர்
அன்வர் ராஜா அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: அமைதி காத்து வருகிறார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா.. இந்த அமைதிக்கு பின்னால் என்ன இருக்கிறது என்ற கலக்கமும், எதிர்பார்ப்பும், அதிமுக, திமுக, பாஜக, சசிகலா தரப்பு என மொத்த பேரையும் சூழ்ந்து கொண்டுள்ளது.
அன்வர்ராஜா.. அதிமுகவின் மூத்த தலைவர்.. எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி என 3 ஆட்சி தலைவர்களிடமும் பொறுப்பில் இருந்தவர்.. பல சமயங்களில் இவரது துணிச்சல் பேச்சு அபாரமானவை!
முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் "இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது" என்று குரல் கொடுத்தவர் அன்வர் ராஜாதான்... எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மசோதாவை ஆதரித்த நிலையில், அன்வர் ராஜா எதிர்க்கவும்தான், பாஜகவின் பார்வை இவர் மீது அழுத்தமாக விழ தொடங்கியது.
அன்வர் ராஜாவின் மவுனவிரதம்! மகனிடம் அலைபேசி! வீட்டை விட்டு வெளியேறி 7 நாட்கள்! அலைமோதும் 2 யோசனைகள்!
கோஷ்டிபூசல்
அன்வர் ராஜாவுக்கும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்.. இருவருமே இந்த தொகுதியில் போட்டியிட அதிமுகவை அப்போது நெருக்கி கொண்டிருந்தார்கள். இந்த கோஷ்டி பூசலை பார்த்து அரண்டு போன அதிமுக, பேசாமல் ரெண்டு பேருக்கும் எம்பி தேர்தலில் சீட் தராமல், கூட்டணி கட்சியான பாஜகவுக்கே தொகுதியை ஒதுக்கலாம் என அதிமுக முடிவு செய்துதான் நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கியது வேறு கதை!
பாஜக
ஆனால், அன்வர் ராஜாவின் போக்கு, எந்த காலத்திலும் பாஜக ரசிக்கும்படியாக இல்லை என்றே கருதப்படுகிறது.. கட்சியில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கியதன் சர்ச்சை இப்போது வரை நீங்கவில்லை.. இதுவும் பாஜகவின் அழுத்தம் என்கிறார்கள் சிலர்.. மேலும் சிலரோ, சசிகலாவை ஆதரித்ததால்தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்கிறார்கள்.. இன்னொரு பேச்சும் உள்ளது, தனிப்பட்ட முறையில் தன்னை தாக்கிய கோபம் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தாலும், முன்னாள் அமைச்சர்களின் அழுத்தமும் அன்வர் ராஜாவை நீக்க காரணமாக இருக்கும் என்கிறார்கள்.
நீக்கம்
அதேசமயம், இந்த நீக்கத்தில் ஓபிஎஸ்ஸுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லையாம், காரணம், எம்ஜிஆர் காலத்து நபரை கட்சியில் இருந்து நீக்கினால் நமக்குதான் பிரச்சனை வரும் என்று எடப்பாடியிடம் ஓபிஎஸ் சொன்னாராம்.. அதையும் மீறிதான் இந்த நீக்கம் நடந்துள்ளது. ஆக மொத்தம், அன்வர் ராஜா பதவி நீக்கம் இப்போதுவரை ஒரு விவாதமாகவே நடந்து கொண்டிருக்கிறது.
சசிகலா
மற்றொரு புறம் அன்வர் ராஜாவின் மவுனம் பெருத்த சந்தேகத்தை கிளப்பி விட்டு வருகிறது.. கட்சியில் இருந்து இவர் நீக்கப்பட்டதுமே, சசிகலாவை சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அவர் செல்லவில்லை.. அப்படியானால் திமுக பக்கம் செல்வார் என்று முணுமுணுக்கப்பட்டது.. அதுவும் நடக்கவில்லை.. அன்வர் ராஜா திமுகவுக்குதான் சேர வேண்டும் என்று நினைத்திருந்தால், அதை எப்போதோ செய்திருக்கலாம்.. இன்றைய தேதி வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள்.
ராமநாதபுரம்
ஆனால், திமுக பக்கம் இவரை இழுக்க தூது படலங்கள் இருந்து கொண்டுதானிருக்கிறதாம்.. காரணம், பாஜகவை எதிர்க்கும் தலைவர் என்பதால், அது திமுகவுக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.. அதனால்தான், அந்த அசைன்மென்ட்டை சூட்டோடு சூட்டாக, அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் தரப்பட்டதாகவும் கூட சொல்லப்பட்டது.. அது எந்த அளவுக்கு உண்மை, அது எந்த அளவுக்கு சென்றுள்ளது என்பது வெளிப்படையாக தெரியவில்லை.. அப்படியே அன்வர் ராஜா திமுக பக்கம் தாவினாலும், ராமநாதபுர மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இதை விரும்புவார்களா? என்பதும் தெரியவில்லை..
அதிருப்தி
ஏற்கனவே அன்வர் ராஜா மீது மாவட்டத்தில் கோஷ்டி பூசல் உள்ள நிலையில், திமுக பக்கம் இவருக்கான ஆதரவு கிடைக்குமா? என்பதும் சந்தேகம் என்கிறார்கள். எனினும், இப்போது வரை அன்வர் ராஜா அமைதி காத்து வருகிறார்.. எந்த அறிக்கையும் விடவில்லை.. யாரிடமும் பேசவில்லை.. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை.. கொஞ்ச நாள் போகட்டும் என்ற ஒற்றை வார்த்தையை தவிர பெரிதாக எந்த கருத்தையும் அன்வர் ராஜா சொல்லாமல் மவுனம் காத்த வருவது, அதிமுகவை லேசான நடுக்கத்திற்கு ஆளாக்கி உள்ளது. அந்த அமைதிக்கு பின்னால் யாருக்காவது "வெடி" இருக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
சைலண்ட்
இப்படிப்பட்ட சூழலில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா வகித்து வந்த சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலர் பதவிக்கு கடுமையான போட்டா போட்டி எழுந்துள்ளதாம்.. குறிப்பாக, முன்னாள் வாரிய தலைவர் லியாகத் அலிகான், கோவை அப்துல் ஜப்பார், மாஜி அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர் மத்தியில் கடும் போட்டி நடப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றன... இதில் லியாகத் அலிகான் அந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு மிக்க தலைவர் இல்லை என்றாலும், மற்ற இருவரில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.