மாநில அரசுடன் மோதல்.. மகளுக்கு பதவி.. "அந்த" 4 விஷயங்கள்.. விசாரணை வலையில் அண்ணா. பல்கலை சூரப்பா
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்க 4 முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பாவிற்கு எதிரான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் இந்த குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்.
சூரப்பா தமிழக அரசுக்கும், பல்கலை எதிர்காலத்திற்கும் எதிராக செயல்பட்டாரா என்று விசாரணை செய்யப்படும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து சூரப்பாவை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விசாரணை நடக்கிறது.
வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி.. அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு.. வெள்ள அபாய எச்சரிக்கை!
காரணம் 1
சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்க 4 முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அதன்படி தமிழக அரசுக்கு எதிராக அரியர்ஸ் தேர்வு விவாகரத்தில் இவர் செயல்பட்டதுதான் முதல் பிரச்சனையாக மாறியது. தேர்வு கட்டணம் செலுத்திய அரியர்ஸ் மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து இருந்த சூரப்பா.. தமிழக அரசின் முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
எதிர்ப்பு மெயில்
தமிழக அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்திடம் இருந்து எனக்கு மெயில் வந்தது, என்றும் குறிப்பிட்டு இருந்தார். உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கும், சூரப்பாவிற்கும் இதனால் மோதல் வந்தது. இதுதான் முதல்படி. அதன்பின், அண்ணா பல்கலைக்கு தன்னாட்சி அந்தஸ்து கேட்டு இவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதும் சர்ச்சையானது.
மாநில அரசு
பல்கலைக்கு தேவையான 1000+ கோடி நிதியை நாங்களே திரட்டிக்கொள்கிறோம், மாநில அரசின் தயவு தேவை இல்லை என்று இவர் கடிதம் எழுதி இருந்தார். அதோடு.. இதெல்லாம் விதியில் உள்ளது, மாநில அரசிடம் இதற்கு அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். தமிழக அரசு சூரப்பா மீது கொதித்து போனது இங்குதான். இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே, மூன்றாவது காரணமும் வெளியே வந்தது.
மூன்றாவது காரணம்
அதன்படி பல்கலைக்குள் தனது மகளுக்கு சூரப்பா பதவி வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. இதெல்லாம் போக நான்காவதாக, அண்ணா பல்கலையில் கடந்த ஆன்லைன் தேர்வை தனியார் நிறுவனம் மூலம் நடத்தி, அதில் பண மோசடி செய்துவிட்டார் என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இதைத்தான் தற்போது விசாரணை குழு விசாரணை செய்ய உள்ளது.
பதில்
இந்த 4 விஷயங்கள்தான் விசாரணைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த புகார்களுக்கு பதில் சொல்லும் வகையில் துணை வேந்தர் சூரப்பா பேசியதாவது , என்னை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. நான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியது கிடையாது.இதுவரை நான் எந்த தவறும் செய்தது கிடையாது. எந்த தவறும் செய்யாத எனக்கு எதிராக விசாரணை ஆணையமா?.
விசாரணை ஆணையம்
விசாரணை ஆணையத்தை எதிர்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. எதையும் சந்திக்க நான் தயாராகவே இருக்கிறேன். எனக்கு கவலை இல்லை, என்னுடைய வங்கி விவரங்களை சோதிக்கட்டும். எனக்கு எதிராக சிலர் தவறான புகார்களை வைக்கிறார்கள். என்னை சிலர் மிரட்டுகிறார்கள்.
மிரட்டல்
என்னுடைய மகள் அண்ணா பல்கலையில் பணிபுரியவில்லை. பெயர் குறிப்பிடாமல் எனக்கு மிரட்டல்கள் வருகிறது. நான் பல இடங்களில் பணியாற்றி இருக்கிறேன். நான் ஐஐடி உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றி இருக்கிறேன். எனக்கு புதிது இல்லை. நான் தூய்மையானவன், என்று கூறிஉள்ளார்.