அடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்?
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டே காலி. எனவே இத்தனை நாட்களாக 'மக்கள் செல்வர்' என்று அவரது கட்சியினரால் அடைமொழியிட்டு அழைக்கப்பட்ட அவரின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஆனால், ஆர் கே நகரில் ஆளும்கட்சியான அதிமுக வை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு, பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்க விடாமல் செய்து அபார வெற்றி பெற்ற தினகரன், இப்போது எப்படி கோட்டைவிட்டு இருப்பார் என்ற அரசியல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன.
இது பற்றி சில அரசியல் விமர்சகர்களிடம் நாம் பேசியபோது அவர்கள் கூறிய தகவல்கள் ஆச்சரியமாக இருந்தன. அது தொடர்பான ஒரு பார்வை:
போட்டியிட்ட மொத்த இடத்திலும் வெளுத்தெடுத்த திமுக.. அதிர்ந்து தரைமட்டமான அதிமுக!
மோடி எதிர்ப்பு அலை
தினகரன் கட்சி பெற்ற தோல்வி என்பது, அந்த கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான அர்த்தம் கிடையாது. இதற்கு பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளன. அதில் முக்கியமான காரணம் என்பது மோடி எதிர்ப்பு அலை. தமிழகத்திலும் மோடி அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நிலை நிலவி வந்தது. அதை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டது திமுக தலைவர் ஸ்டாலின் தான்.
பயன்படுத்திய ஸ்டாலின்
மோடி எதிர்ப்பு அலை இருப்பதை சரியாக புரிந்து கொண்டு நேரடியாக மோடியை தாக்கி பல பொதுக்கூட்டங்களில் பேசினார். மிக கடுமையான வார்த்தைகளில் பிரச்சாரம் செய்தார். ஆனால் தினகரன் அது போன்ற தீவிரமான மோடி எதிர்ப்பை கைக்கொள்ளவில்லை. மத்திய அரசுடன் அவர் அனுசரித்து செல்வதற்கு தயாராக இருப்பதாக ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.
நாடு முழுக்க ஆதரவு அலை
இந்த நிலையில் தான், லோக்சபா தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக, காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். நாடு முழுக்க மோடி ஆதரவு அலை வீசியதால் பிற கட்சிகள் எப்படி காணாமல் போனதோ, அது போல தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசியதால், பிற கட்சிகள் அனைத்தும் எழுந்திருக்க முடியாமல் அடிவாங்கி உள்ளன.
எல்லா கட்சியும் ஒன்றுதான்
எனவே இந்த தேர்தலை வைத்து மட்டும் தினகரன் கட்சி என்று மட்டும் கிடையாது, வேறு எந்த கட்சியினுடைய செயல் ஆற்றலையும் கணித்துவிட முடியாது என்கிறார்கள் அழுத்தம் திருத்தமாக. அதேநேரம், திமுகவுக்கு மாற்றாக மக்கள் கருதுவதால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் அவர்கள் கருதுகிறார்கள். சட்டசபை இடைத் தேர்தல்களிலும் கூட அதிமுகவுக்கு மாற்றாக திமுகவுக்கும், திமுகவுக்கு மாற்றாக அதிமுகவுக்கு மக்கள் வாக்குகளை அளித்துள்ளனர். தினகரன் கட்சிக்கு அளிக்கக்கூடிய வாக்குகள் சட்டசபையில் எந்த பலனையும் அளிக்காது என்ற கண்ணோட்டம் தான் இதற்கு காரணம்.
சட்டசபை தேர்தல்
திமுக, அதிமுக தவிர பிற கட்சிகளின் உண்மையான செல்வாக்கை அறிய வேண்டுமென்றால், வரும் சட்டசபைத் தேர்தல் மட்டுமே அதற்கு சரியான களமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இது தவிர்த்த மற்றொரு காரணம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பெரும்பாலும் விட்டமின் 'ப' பாயவில்லை என்கிறார்கள். என்ட் ஆப் தி டே, இன்றைய அரசியலில் அதுவும் முக்கியமாகிவிட்டதே, என்ன செய்ய!