திமிரினாலும் இபிஎஸ் கோஷ்டியை விடாபிடியாக பிடிக்கும் பாஜக! தம்பிதுரைக்கு அடுத்தடுத்த டெல்லி பதவி!
சென்னை: பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என தனி ரூட்டில் அதிமுகவின் இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) கோஷ்டி செல்ல முயற்சித்தாலும் பாஜக அவ்வளவு எளிதாக விட்டுவிடுவதில்லை என தீர்மானமாக இருக்கிறதாம். எடப்பாடியின் தீவிர ஆதரவாளரான தம்பிதுரைக்கு அடுத்தடுத்து மத்திய அரசு பதவி வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது டெல்லி.
அதிமுக பல கோஷ்டிகளாக பிரிந்து கிடப்பதால், 2024 லோக்சபா தேர்தலில் கணிசமான இடங்களையாவது தமிழகத்தில் கைப்பற்றலாம் என்ற தங்களது கனவு தகர்ந்து போவதாக பதறுகிறது பாஜக. அதனால் அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளையும் எப்படியாவது ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்பதில் டெல்லி பாஜக மேலிடம் உறுதியாக உள்ளது.
விட்டு விலகும் இபிஎஸ்! பியூஷ் கோயலை சந்திக்க சம்மன் அனுப்பிய பாஜக? தம்பிதுரை சந்திப்பு பின்னணி என்ன?
எடப்பாடி தனி ஆவர்த்தனம்
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். இந்த பிடிவாதத்தை டெல்லி ரசிக்கவில்லை; அதனால் டெல்லியில் சில முக்கிய சந்திப்புகளுக்கும் எடப்பாடிக்கு ஓகே சொல்லாமல் திருப்பி அனுப்பியது. இதனால் பாஜகவே வேண்டாம் என எடப்பாடி தரப்பு முடிவெடுத்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் எடப்பாடிக்கு வலது இடதுமாக இருக்கும் சில மாஜிக்கள் தங்களது மீதான வழக்குகளை சுட்டிக்காட்டி இந்த முடிவு விபரீதமானது என அதிருப்தியையும் தெரிவித்திருந்தனராம்.
பிரதமர் மோடி, அமித்ஷா
இந்நிலையில் மதுரை வந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ்- இபிஎஸ் கைகளை பிடித்து ஒன்று சேர்த்தபடி வரவேற்பைப் பெற்றார். இதன்மூலம் டெல்லி மேலிடம் அதிமுகவின் ஒற்றுமையைத்தான் விரும்புகிறது என்பது பட்டவர்த்தமானது. ஆனால் எடப்பாடி கோஷ்டியிலோ பெரும்பாலான நிர்வாகிகள், பாஜகவை ஒதுக்கினால் அமோக ஆதரவு கட்சியிலும் மக்களிடத்திலும் கிடைக்கும்; திமுக கூட்டணியிலும் கலகம் ஏற்படுத்தி கட்சிகளை பிரிக்கலாம் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்தே அமித்ஷாவை எடப்பாடி சந்திக்கவும் மறுத்தார். இதனால் பாஜக அல்லாத எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அதன் பின்னால் வரப் போகும் கட்சிகளும் என ஒரு புதிய கூட்டணிக்கான மாயதோற்றங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
பியூஷ் கோயலுடன் சந்திப்பு
இந்த நிலையில் அண்மையில் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை எடப்பாடி கோஷ்டியை சேர்ந்த தம்பிதுரை எம்.பி. சந்தித்தார். அப்போது எடப்பாடி சொன்னதால்தான் பியூஷ் கோயலை சந்தித்தேன் என தம்பிதுரை கூறியிருந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமியை அவ்வளவு எளிதாக பாஜக விட்டுவிடாது என்பதற்குதான் இந்த சந்திப்பு எனவும் கூறப்பட்டது.
எடப்பாடியை விடாத பாஜக
இந்த நிலையில்தான் மத்திய கல்வி, மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு நலன், விளையாட்டுத்துறை நிலைக் குழு உறுப்பினராக தம்பிதுரை நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அண்மையில்தான் உத்தரவாதங்களுக்கான ராஜ்யசபா எம்பிக்கள் குழுவில் தம்பிதுரைக்கு வாய்ப்பு கிடைத்தது. தம்பிதுரை அல்லது எடப்பாடி கோஷ்டிக்கு தொடர்ந்து டெல்லி முக்கியத்துவம் தருவது என்பது பாஜகவானது எடப்பாடி பழனிசாமியை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவதாகவும் இல்லை என்பதையே காட்டுகிறது என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.