திமுகவின் அந்த ஒரு வார்த்தை.. நைசாக உறுதிமொழியில் இணைத்துக்கொண்ட விஜய்.. தவெக ஸ்டைல் அப்போ இதுதானா?
சென்னை: தமிழக வெற்றிக் கழக கொடியை இன்று அறிமுகப்படுத்துகிறார் விஜய். கட்சிக் கொடியின் வண்ணம் என்ன? இலச்சினை என்ன என தொண்டர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டு போர் யானைகள் இருக்கும் விதமாக கொடி அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இன்று கொடி ஏற்றிய பின் மேற்கொள்ளப்பட உள்ள உறுதிமொழி வெளியாகி உள்ளது. இன்று விஜய் கொடி ஏற்றியதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பின்வரும் உறுதி மொழியை படிக்க உள்ளனர்.

அதன்படி, நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழியை கூறப்பட்டு உள்ளது.
திமுக அதிகம் பயன்படுத்தும் சமூக நீதி என்று வார்த்தையை தனது உறுதிமொழியில் விஜய் இணைத்துள்ளார்.
அறிவிப்பு: நேற்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும்.. என்று விஜய் குறிப்பிட்டு இருந்தார்.
விஜய் கட்சி அரசியல்: விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் கட்சியின் கொடி கலர் அடர் சிவப்பு + மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கைதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications