அதிகாலை முதலே மழை - குளுகுளுவென மாறிய சென்னை - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் மழை!
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம், வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, சென்னை- ஆந்திர கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற காரணத்தால் வருகிற 8ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, அடையாறு, பட்டினம்பாக்கம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், போரூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதேபோல், சென்னையின் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலவராக மழை பெய்து வருகிறது. திடீரென பெய்து வரும் மழையால், சாலையில் மழை நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளதால், ஆயுதபூஜை உள்ளிட்ட விடுமுறைகளை முடித்து இன்று பணிக்கு திரும்புவோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம்,காந்தி சாலை,செவிலிமேடு, பெரியார் நகர், மூங்கில் மண்டபம்,சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழையானது வெளுத்து வாங்கியது.
மேலும் இந்த கன மழையின் காரணமாக சாலையில் ஆங்காங்கே தேங்கிய மழை வெள்ள நீரால் இரவு நேரத்தில் வாகனத்தை இயக்கிச்சென்ற வாகன ஓட்டிகளும், தொழிற்சாலைக்ளில் இரவு பணி முடிந்து வீடு திரும்பியவர்களும், வெளியூர்களுக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.