ரூல்ஸ் 175, 176ஐ மீறிட்டாங்களே.. முதலமைச்சர், எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை பாயுமா? பாஜக கேள்வி!
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது குறுக்கீடு செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாரயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் உரையாற்றியபோது சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், கூச்சல் செய்த எம்.எல்.ஏக்கள் மீதும், ஆளுநர் உரைக்குப் பிறகு பேசிய முதலமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது பாஜக.
தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பப்பட்ட உரையின் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்த ஆளுநர் ரவி, சில பகுதிகளை சொந்தமாக சேர்த்து உரையாற்றினார். இதனால் ஆளுநர் உரை முடிந்த பிறகு வழக்கத்திற்கு மாறாக எழுந்து, ஆளுநர் ஆற்றிய உரையை அவைக்குறிப்பில் சேர்க்கக்கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆளுநர் அவை மரபை மீறியதாக திமுக உள்ளிட்ட கட்சியினரும், முதலமைச்சர் அவை மரபை மீறிவிட்டதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் மாற்றி மாற்றி விமர்சித்து வருகின்றன.
மாநில அரசு உரையில்.. ஆளுநர் புள்ளி, கமா கூட சேர்க்க முடியாது.. லோக்சபா முன்னாள் செயலாளர் விளக்கம்
தவிர்த்த ஆளுநர் ரவி
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உரையாற்றியபோது அமைதிப் பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், திராவிட மாடல், பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்து தவிர்த்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அதனை ஆளுநர் சட்டப்பேரவையில் முழுமையாக வாசிக்காதது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
வேகமாக வாக் அவுட் செய்த ஆளுநர்
இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சபை விதிகளை தளர்த்திக் கொண்டு ஆளுநருக்கு எதிராக அவசர தீர்மானம் கொண்டு வந்தார். ஆளுநர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது, அச்சடிக்கப்பட்ட உரையையே அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனால் கோபமடைந்த ஆளுநர் ரவி, கூட்டம் முடிவதற்கு முன்பாகவே, தேசிய கீதம் பாடுவதற்குள் சபையில் இருந்து வேகமாக வெளியேறினார். ஆளுநர் வெளிநடப்பு செய்த போது எம்எல்ஏக்கள் சிலர் கூச்சலிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவை மரபை மீறியது யார்?
ஆளுநர் அவை மரபை மீறியதாக திமுக உள்ளிட்ட கட்சியினரும், முதலமைச்சர் அவை மரபை மீறிவிட்டதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் மாற்றி மாற்றி விமர்சித்து வருகின்றன. மாநில அரசின் கொள்கை விளக்க அறிக்கையான ஆளுநர் உரையை முழுமையாக வாசிப்பதுதான் ஆளுநரின் கடமை என திமுக தரப்பு, சபாநாயகர் தரப்பு தெரிவிக்கிறது. அதேசமயம், பாஜக தரப்போ, ஆளுநர் உண்மைக்கு மாறான விஷயங்களை பேச வேண்டும் என்று கட்டாயமில்லை, திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அவையில் ஆளுநரை அவமதித்து விட்டனர் எனக் குற்றம்சாட்டுகிறது.
விதி 175,176
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, "தமிழ்நாடு சட்டமன்ற விதிகளில் அத்தியாயம் 4ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டத்தின் 175, 176ன் பிரிவின் படி, அவை கூடியிருக்கும்போது ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ, உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது, அவ்வாறு தடங்கலோ அல்லது குறுக்கீடோ செய்வது பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பதாகக் கருதப்பெற்று அடுத்து நிகழும் கூட்டத்தில் பேரவை தலைவரால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் ஸ்டாலின் மீது நடவடிக்கை
இதனடிப்படையில், நேற்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வில், ஆளுநர் உரைக்கு முன்னர் இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திக்கொண்டிருந்த போது இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திய பின்னர் குறுக்கீடு செய்து, தடங்கல் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முன் வரவேண்டும். அதுவே சட்டம்! அதுவே ஜனநாயகம்! முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி
மேலும், திமுக அமைச்சர்கள் பலர் அநாகரீகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். நேற்று சட்டசபையில் அமைச்சர் பொன்முடியின் யோக்கியதையை உலகமே வேடிக்கை பார்த்து சிரித்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய சட்டசபை விவகாரம் குறித்து முதிர்ச்சியற்ற வகையில், சிறுபிள்ளைத்தனமாக, மலிவான விமர்சனங்களை குறிப்பிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மீது தவறில்லை
பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் ரவி செய்தது தவறில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் செய்ததே தவறு என்றும் கூறி வருகின்றனர். முன்னதாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ஆளுநரின் உரையை எதிர்த்து ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளார்களே? உண்மைக்குப் புறம்பானதை ஆளுநர் பேச வேண்டிய அவசியமில்லை. ஆளுநர் அவையில் இருக்கும் போதே அவருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவது ஜனநாயக விரோதம் என்று தெரிவித்திருந்தார்.