மீண்டும் மீண்டும் சூர்யாவை வம்பிழுப்பதா?..திரையுலகினர் வேடிக்கை பார்க்க மாட்டோம்..கருணாஸ் எச்சரிக்கை
ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை அவதூறாக சித்தரித்ததாக வன்னியர் சங்கத்தினர் சூர்யா மீது கடும் கோபத்தில் உள்ளனர். சூர்யாவுக்கு எதிராக ரூ.5 கோட்டி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர், சூர்யா மீதான பாமகவினர் கோபம், போராட்டம் குறித்து நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ் கண்டன அறிக்கை விட்டுள்ளார். அதில் கருத்துரிமை பேரில் கழுத்தை நெறிப்பதை திரையுலகினர் நாங்கள் வேடிக்கை பார்க்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை
நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ஜெய்பீம் படம் பெரிய வரவேற்பை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இருளர் இன மக்களுக்கு எதிராக போலீஸ் நடத்திய வன்முறை வெறியாட்டத்துக்கு எதிராக முன்னாள் நீதிபதி சந்துரு இலவசமாக வழக்காடி நியாயம் கிடைக்கச் செய்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்பதால் பெரும் வரவேற்பை உலகெங்கிலும் படம் பெற்றுள்ளது.

முதல்வர் முதல் அரசியல் கட்சித்தலைவர்கள் பாராட்டு
படத்தை பார்த்து அதிர்ந்துப்போனேன், 1976 ஆம் ஆண்டு மிசாக்கால கொடுமைகள் என் மனதில் நிழலாடியது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் படத்தை பாராட்டினர். தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் படத்தை பாராட்டியுள்ளனர். அதேபோல் எதிர்கருத்துகளும் சில அரசியல் கட்சிகளால் வைக்கப்பட்டதால் ஜெய்பீம் படம் சர்ச்சை பரபரப்பாக பேசப்படுகிறது.
வன்னியருக்கு எதிராக காட்சி அமைப்பா?
படத்தில் வரும் கொடுமைக்கார எஸ்.ஐ குருமூர்த்தியை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக காட்சிப்படுத்தும் விதத்தில் அவரது வீட்டில் காலண்டர் காட்சி இருந்ததாக வன்னியர் சமூகத்தினர் சமூக வலைதளங்களில் கண்டனம் எழுப்பினர். நிஜ வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. அந்தோணிசாமி தலித் கிருத்துவர் என்று இருக்கும்போது வலுக்கட்டாயமாக இக்காட்சியை வன்னியருக்கு எதிராக வைக்கும் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.
சூர்யாவுக்கு அன்புமணி கடிதம்-சூர்யா பதில்
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சூர்யாவும் பதிலுக்கு விளக்கம் அளித்திருந்தார். படத்தில் வரும் அக்காட்சியும் மாற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து இப்பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது, சூர்யாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு என வடமாநில பாணியில் வன்னியர் சங்கத்தை சேர்ந்த சிலர் அறிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர் சங்கம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்
இந்நிலையில் வன்னியர் சங்கம் சார்பில் ரூ 5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநில தலைவர் நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மறுபுறம் சூர்யா மீது கடும் கோபத்தைக் காட்டி வரும் வன்னிய சங்க நிர்வாகிகள் சூர்யாவை உதைத்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு என அறிவித்துள்ளது படைப்பாளிகள் இடையே கோபத்தை கிளறியுள்ளது.
சூர்யாவுக்கு எழும் ஆதரவு
சூர்யாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சூர்யாவுக்கு எதிரான மிரட்டலை கண்டித்துள்ளார். தென் இந்திய திரைப்பட வர்த்தக சபையும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது. பாரதிராஜா தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். சூர்யாவுக்கு ஆதரவாக முன்னணி நடிகர்கள் குரல் தராமல் மவுனமாக இருப்பது ஏன் என்கிற வாதமும் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கருணாஸ் துணைத்தலைவர் லெட்டர் பேடில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரது பதிவில் சூர்யா தவறை சரி செய்தபின்னரும் வன்மத்துடன் மீண்டும் மீண்டு சீண்டினால் திரையுலகினர் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளார். அவரது பதிவு வருமாறு:
"அரசியல் ஆதாயத்திற்காக கருத்துரிமையின் கழுத்தை நெறிப்போரை திரைத்துறையினர் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி இணையதளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருளர் பழங்குடியினரின் வாழ்வியலை அவர்களின் அறப்போராட்டத்தை மெய்யாக படம் பிடித்ததால் வெற்றியடைந்தது. ஆனால் வம்படியாக ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் பாமகவினர் அராஜகம் செய்கின்றனர். இந்த திரைப்படத்தை சாதி ரீதியான சிக்கலுக்குள் அடைக்கின்றனர். மீண்டும் மீண்டும் வீண்வம்பு செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது
தங்களுக்கு சமுதாயத்தை புண்படுத்தும்படியான காட்சிப்படம் திரைப்படத்தில் இடம் பெற்றதாய் பாமகவினர் குரல் கொடுத்தனர். அதை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடிகர் சூர்யா அந்த காட்சியை உடனடியாக நீக்கி விட்டார். பிரச்சனை முடிந்தது, ஆனால் மீண்டும் மீண்டும் பாமகவினர் வம்படி செய்வதும், திரைப்படச் சுவரொட்டிகளை கிழிப்பதும், திரை அரங்கங்களில் படம் ஓட விடாமல் தடுப்பதும் அபத்தத்தின் உச்சம். தொடர்ந்து இதை திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவதும். சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு எல்லாம் என்ன அரசியல் அறம் என்று புரியவில்லை. ஏதாவது ஒன்றில் அரசியல் சூழலில் சறுக்கினால் அடுத்து உடனே ஏதாவது செய்தி பரபரப்பாக பேச வேண்டும் என்ற அரசியல் நோக்கில் இப்போது பாமக ஜெய்பீம் திரைப்படத்தை பயன்படுத்தி இறங்கியுள்ளது.
அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு நடிகர் சூர்யா தமிழ் சமூகத்திற்கு பங்காற்றுகிறார். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் பணிசெய்து பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார். தமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒன்றென்றால் உறுதியாக நிற்கிறார். ஜெய்பீம் திரைப்படத்தோடு அவர் நின்றுவிடவில்லை அதற்கும் மேலாக அந்த படத்தில் வாழ்ந்த இருளர் சமூக மேம்பாட்டிற்கு ஒரு கோடி நிதி தருகிறார். இப்படிப்பட்ட மனித நேயரை சமூக அக்கறை கொண்ட கலைஞனை இனி விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கருணாஸ் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணை தலைவர் என்ற அடிப்படையில் அறிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications