டிடிவி தினகரனுக்கு சொன்னபடி பாஜக செய்துடுமா? ஒரு பக்கம் அமமுக, மறு பக்கம் தமாகா! விழிக்கும் அதிமுக
சென்னை: தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், பிரதான கட்சிகளுக்கு இடையே நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துவருகின்றன.. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.. எடப்பாடி பழனிசாமி தரப்பு எந்த அளவுக்கு இக்கட்டான சூழலில் இருக்கிறது என்பது இதன்மூலமே தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இதில் ராஜ்யசபா சீட் குழப்பமும் சேர்ந்து கொண்டுள்ளது..
அதிமுகவிடம் ராஜ்யசபா இடங்களைப் பிடிப்பதற்கு கூட்டணி கட்சிகள் காட்டும் ஆர்வம், அரசியல் களத்தையே பரபரப்பாக்கியுள்ளது. ஏற்கனவே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிற்கு ஒரு இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் கசிந்துள்ள நிலையில், மீதமுள்ள அந்த ஒரே ஒரு இடத்திற்குதான் அத்தனை பேரும் போட்டியில் வரிசைகட்டி நிற்கிறார்கள்..

தமாகா ஜிகே வாசன்
அந்த ஒரே ஒரு இடத்திற்காகத்தான் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் மறைமுகமாக மல்லுக்கட்டி வருகிறார்களாம்..
10 சீட்டுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை இருந்தபோதும், எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அமமுகவுக்கு 7 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணியின் தலைமை பொறுப்பு அதிமுகவிடம் இருந்தாலும், அமமுகவை இணைக்க பாஜக தனது ஒதுக்கீட்டிலிருந்தே ஒரு எம்பி. சீட்டை வழங்க முன்வந்திருப்பதாக தெரிகிறது.. அதனால்தான் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று தினகரன் கூறிவருகிறார்..
அமமுக டிடிவி தினகரன்
ஜி.கே.வாசனைப் பொறுத்தவரை, தேசிய அரசியலில் தமக்கு இருக்கும் செல்வாக்கையும் அனுபவத்தையும் முன்வைத்து அந்த இடத்தை அடையத் துடிக்கிறார்.
மறுபுறம், டி.டி.வி. தினகரன் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்கவும், தனது கட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தருவதற்கும் இந்த வாய்ப்பைத் தக்கவைக்க நினைக்கிறார். இந்த இருவருக்குள்ளும் நடக்கும் இந்த ஈகோ யுத்தம்தான், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறதாம்..
இந்த குழப்பங்கள் ஒருபுறம் இருக்க, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விதித்துள்ள கண்டிஷன் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல அமைந்துள்ளதாம்..
பாஜக சொன்ன சீட்
அதாவது "ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி" என்கிற கறாரான முடிவை அவர் அறிவித்துள்ளதால், அதிமுக தலைமை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. ஏற்கனவே தினகரன் மற்றும் வாசன் ஆகியோரைச் சமாளிப்பதே கடினமாக உள்ள சூழலில், பிரேமலதாவின் இந்த நிபந்தனை கூட்டணியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஒரே ஒரு சீட்டுக்காக 3 பக்கமும் மோதிக்கொள்வது எடப்பாடி பழனிசாமியை இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருப்பதாக தெரிகிறது..
அதிமுக குழப்பம்
இதில் யாரைத் திருப்திப்படுத்தினாலும் மற்ற 2 பேரும் அதிருப்தி அடைய வாய்ப்புள்ளது.. எனவே தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளைப் பகைத்துக்கொள்வது சரிவராது என்பதே எடப்பாடியின் கணக்காக உள்ளதாம்.. அதே சமயம், தனது சொந்த கட்சியினரின் எதிர்பார்ப்புகளையும் அவர் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்..
மொத்தத்தில், இந்த ராஜ்யசபா சீட் விவகாரமானது தமிழக அரசியலில் வரும் நாட்களில் இன்னும் பல திருப்பங்களை ஏற்படுத்திவிடும் போல் தெரிகிறது.. இந்த ஒரு சீட்டு யாருக்கு போய்ச் சேரப்போகிறது, அதற்காக யார் விட்டுக்கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்தே அதிமுக கூட்டணியின் பலமும் பலவீனமும் தீர்மானிக்கப்படும்... பொறுத்திருந்து பார்ப்போம்..












Click it and Unblock the Notifications