தர்மயுத்த நாயகன் மகனைக் கரையேற்ற விரைந்தோடி வரும் மோடி.. கை கொடுக்குமா பிரதமர் பிரச்சாரம்
சென்னை: மகனை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் ஓபிஎஸ் மிகவும் கவனமாக இருக்கிறார். இதற்காக பிரதமர் மோடியே வரும் 13 ம் தேதி தேனி தொகுதியில் பிரச்சாரம் செய்ய வரவுள்ளார்.
குடும்ப அரசியல் கூடாது என்பதற்காக மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ். இப்போது அவரது மகனையே தேனி தொகுதியின் வேட்பாளாராக்கி அழகு பார்த்து வருகிறார். தேனி தொகுதியில் இவரை எப்படியும் தேறவைப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஓபிஎஸ் சும் தமிழக அமைச்சர் பெருமக்களும் இயங்கி கொண்டிருக்க ஓபிஎஸ் மகனை எப்படியும் வீழ்த்தியே ஆகவேண்டும் என்று அமமுகவின் தினகரன் தரப்பு தீயாய் வேலை செய்கிறது.
ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்தை எப்படியும் தோற்கடித்தே தீருவது என்று அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு பெற்றவரான தங்க தமிழ் செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த தொகுதிக்கு திடீர் வேட்பாளாராக காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் களமிறங்கி உள்ளார். இதனால் அந்த தொகுதி இப்போது ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரையடுத்து திமுக கூட்டணி கட்சியினரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அடுத்ததாக தமிழகம் வரவுள்ள ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரை தேனி தொகுதிக்கு அழைத்து வந்து பிரச்சாரம் மேற்கொள்ள ஈவிகேஎஸ் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ராகுல் மற்றும் பிரியங்கா தேனி தொகுதிக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்ளும்போது அது ஈவிகேஎஸ் சுக்கு பெரும் சாதகமாக மாறும் என்று தெரிகிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பு மோடியை தேனி தொகுதிக்கு அழைத்து வர கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
ஏப்ரல் மாதம் 8 ம் தேதி மோடி தமிழகத்திற்கு வருவார் என்று கூறப்பட்டது ஆனால் அவரது பிரச்சாரப் பயணம் மாற்றி அமைக்கபப்பட்டுள்ளது. அதன்படி அவர் 12 ம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளார். அன்றைய தினம் கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனையும் பிற பாஜக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கு அடுத்த நாள் 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவர் தேனி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் சின் மகன் ரவீந்திரநாத் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தமிழகத்தில் பாஜகவினர் ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில் ஏதாவது தொகுதிகளில் மோடி பிரச்சாரம் மேற்கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதிமுக சார்பில் ஓபிஎஸ் சின் மகன் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது பாஜக மற்றும் அதிமுகவினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மயுத்தம் செய்தபோதும் சரி அதற்கு பின்னர் ஆளுநர் சிரமேற்கொண்டு ஓபிஎஸ் சையும் ஈபிஎஸ் சையும் கைகளை இணைத்து சேர்த்து வைத்தபோதும் சரி ஓபிஎஸ் பிரதமரோடு மிகவும் நெருக்கத்தில் இருந்தார். ஈபிஎஸ் சோடு இணைந்து துணை முதல்வராவதற்கு முன்னர் சாதாரண எம்.எல்.ஏ வாக இருந்தபோதே ஒரு நாட்டின் உயர்ந்த பொறுப்பில் இருந்த பிரதமரை நினைத்த நேரத்தில் எல்லாம் சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பின்னர் நிர்மலா சீதாராமனே ஓபிஎஸ் சை பார்க்காமல் திருப்பி அனுப்பியது வேறு கதை.
இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்
இப்படிப்பட்ட நிலையில் 13 ம் தேதி தேனி தொகுதியில் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே புருவத்தை உயர்த்த வைத்துள்ளது என்பதோடு ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினரிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளிலும் பிரதமர் பிரச்சாரம் செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications