கூட்டி கழிச்சி பார்த்தால்.. சகாயத்தை முன்னிறுத்தி ரஜினியும் கமலும் வரும் தேர்தலில் ஆதரவு தருவார்களா?
சென்னை: ஒரு பக்கம் கமல் தனது கட்சி தொடங்கி 4ஆவது ஆண்டு தொடக்க விழாவை நடத்துகிறார்... இன்னொரு பக்கம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பொதுக் கூட்டம் நடத்துகிறார்.... இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லாவிட்டால் சகாயத்தை முன்னிறுத்தி ரஜினியும் கமலும் ஆதரவு தருவார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.
மக்களுக்கு நேர்மையான ஒரு ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2017ஆம் ஆண்டு கமல்ஹாசன் மதுரையில் தொடங்கினார். அன்று முதல் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுவது, எதிர்ப்பது என ட்விட்டரில் ஆக்டிவ்வாகவும் இருந்து வருகிறார். இவரது கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றது.
தேர்தல் பிரச்சாரம்
இதனால் இவரது கட்சி மீது வரும் சட்டசபை தேர்தலில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு காலில் ஏற்பட்ட அறுவை சிகிச்சைக்காக இத்தனை நாட்களாக ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
நல்லவர்களுடன் கூட்டணி
இதுகுறித்து கமலிடம் கேட்டபோது நல்லவர்களுடன் கூட்டணி என தெரிவித்தார். இந்த நிலையில் தனது கட்சி ஆரம்பித்து 4ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. நேற்றைய தினம் ரஜினிகாந்துடன் 45 நிமிடம் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் ரகசிய ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்திக்கிறார்.
இணைவார்களா
இது ஒரு புறமிருக்க... ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் இன்று மாலை 4 மணிக்கு பொதுக் கூட்டம் நடத்துகிறார். இதில் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கமலும் சகாயமும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதால் இருவரும் இணைவார்களா என்ற கேள்வி எழுகிறது.
அரசியலுக்கு வர அழைப்பு
மக்களுக்கு லஞ்ச லாவண்யமற்ற ஆட்சியைத் தர வேண்டும் என்பது இருவரின் கொள்கையாகும். அந்த வகையில் லட்சியம் ஒன்றாக இருக்கும் இருவரும் ஒன்றாக இணைந்தால் வெற்றி நிச்சயம் என பெரும்பாலானோர் எதிர்பார்க்கிறார்கள். கமல்ஹாசனும் ஒரு பேட்டியில் சகாயம் போன்றோர் அரசியலுக்கு வர வேண்டும் என அழைத்திருந்தார்.
மக்கள் நீதி மய்யத்தினர்
எனவே சகாயம் தனது மக்கள் பாதை அமைப்பை அரசியல் கட்சியாக தொடங்கி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பாரா? அப்படியே சந்தித்தாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என மய்யத்தினர் கூறி வருகிறார்கள், சகாயத்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க இளைஞர்கள் விரும்புகிறார்கள். எனவே இருவரும் இணைந்தால் முதல்வர் வேட்பாளரில் பிரச்சினை ஏற்படும் என தெரிகிறது. ஆனால் இருவரின் எண்ணமும் ஒன்று என்பதால் இதில் விட்டுக் கொடுக்கலாம்.
ரஜினியும் கமலும்
கமல்ஹாசன் நேற்றைய தினம் ரஜினியை சந்தித்துள்ளார். அவரது உடல்நிலை குறித்து விசாரித்ததாக சொல்லப்பட்டாலும் கமல், ரஜினியிடம் ஆதரவு கேட்டதாகவே பேசப்படுகிறது. என்னதான் ரஜினியின் ஆதரவு யாருக்குமில்லை என மக்கள் மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியானாலும் இதுவரை ரஜினி வாய் திறந்து கூறவில்லை. எனவே தமிழக மக்களின் நன்மைக்காக திடீரென ரஜினி மனம் மாறி கமல்ஹாசனை ஆதரிக்குமாறு கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே ரஜினி- கமல் சந்திப்பு, ஒரே நாளில் கமல்- சகாயம் நிகழ்ச்சி, கமல், ரஜினி, சகாயம் ஆகிய மூவரின் எண்ணங்களும் ஒன்றாக இருப்பது- இவற்றையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் ரஜினியும் கமலும் இணைந்து சகாயத்தை முன்னிறுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.