நகர பேருந்துகளில் இலவச பயணம்.. குடும்ப செலவுக்கு கூடுதல் பணம் கிடைக்கிறது.. பெண்கள் உற்சாக வரவேற்பு
சென்னை: தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அரசு நகர சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று முத்தான திட்டத்தை கொண்டு வந்தார்.
தமிழக அரசு அறிவிப்பின்படி இன்று அதிகாலை முதலே அரசு நகர சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மே 10 முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம்.. முதல் தவணை ரூ 2000 விநியோகம்
தமிழக அரசின் இந்த சூப்பர் திட்டம் பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக நாம் சில பெண்களிடம் கருத்துகளை கேட்டறிந்தோம். அவர்கள் கூறியதை கீழே தொடர்ந்து பாருங்கள்.
ஸ்டாலினுக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் ஆர்த்தி என்ற இளம்பெண் கூறியதாவது:- பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது எங்களுக்கு மிகவும் பயன்மிக்கதாகவும். வேலை பார்க்கும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு இது பயன் மிக்கதாக இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இன்னும் திட்டங்கள் வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம் கண்மணி என்ற இளம்பெண் கூறியதாவது:- பணிபுரியும் பெண்கள், படிக்கும் மாணவிகளுக்கு இந்த திட்டம் கைகொடுக்கிறது. வேலை முடிய எவ்வளவு நேரமாக இருந்தாலும், நகர பேருந்துகள் இருப்பதால் நாங்கள் கட்டணமின்றி வீட்டுக்கு வந்து விடுவோம். பள்ளி, கல்லூரிகள் திறந்தால் கூடுதல் பெண்கள் பயன் பெறுவார்கள். இன்னும் பெண்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும்.
சிலருக்கு தெரியவில்லை
அரசு பஸ் நடத்துனர்கள், டிரைவர்கள் சிலர் கூறுகையில், அரசின் இந்த திட்டம் பெண்களுக்கு ஏற்படும் பயண செலவுத் தொகையை மிச்சப்படுத்தும். அனைத்து பெண்கள் மத்தியிலும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. சிலர் அரசின் அறிவிப்பு தெரியாமல் எங்களிடம் டிக்கெட்டுக்கு பணம் கொடுப்பார்கள். நாங்கள் அரசின் அறிவிப்பை அவர்களிடம் எடுத்து கூறினோம்.நகர பேருந்துகள் அதிகபட்சம் 35 கி.மீ வரை இயக்கப்படும்.
குடும்ப செலவுக்கு பணம் கிடைக்கிறது
இந்த திட்டம் கிராமங்களில் இருக்கும் பெண் கூலி தொழிலாளர்கள், கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதமாக இருப்பதாகவும் இதன் மூலம் தங்களுக்கு ரூ.50 வரை தினமும் மிச்சமாவதாகவும் புதுக்கோட்டையை சேர்ந்த சில பெண்கள் தெரிவித்தனர். பேருந்து பயணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மீதமாகும் இந்த பணத்தை குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்த முடிகிறது என்று சில பெண்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.