வன்னியர்கள், காடு வெட்டி குரு மீதான வன்மம் தான் ஜெய்பீம் திரைப்படம்- கவிஞர் ஜெயபாஸ்கரன் கொதிப்பு
சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் இந்த திரைப்படம் வன்னியர் சமூகத்துக்கு எதிரானது என்று தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் ஜெயபாஸ்கரன் சாடியுள்ளார்.
இருளர் சமூகத்தின் மீதான காவல்துறை ஒடுக்குமுறை, இந்த ஒடுக்குமுறைக்கு நீதி பெற்றுத் தரும் வழக்கறிஞர் சந்துரு என ஜெய்பீம் திரைப்படம் பலரது மனசாட்சியையும் உலுக்கி எடுத்திருக்கிறது. நீதியரசர் சந்துரு வழக்காடிய நிஜ வழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்டதுதான் ஜெய்பீம் திரைப்படம்.
இத்திரைப்படத்தில் சில குறியீடுகள் வன்னியர் சமூகத்துக்கு எதிராக திட்டமிட்டே பொய்யாக உருவாக்கப்பட்டிருக்கிறது என விமர்சிக்கிறார் கவிஞர் ஜெயபாஸ்கரன். அவரது சமூக வலைதளப் பதிவு சர்ச்சையாகவும் விவாதப் பொருளாகவும் மாறி இருக்கிறது. கவிஞர் ஜெயபாஸ்கரனின் பதிவு:
சூர்யாவுக்கு துணிச்சல் இருக்கு..! விஜய்யிடம் துணிச்சல் இல்லை..! சீமான் வாய்ஸ்
குரு...குரு..
நிராயுதபாணிகளாகக் கிடந்து, ஒவ்வொரு வேளை உணவுக்கும் அல்லாடிச் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது விழிப்புணர்வு பெற்று நிமிர்ந்திருக்கின்ற ஒரு தனிப்பெரும் சமூகத்திற்கு எதிரான ஒரு பெரு வன்மம்! அந்த வன்மம் தான், தொன்னூறுகளின் தொடக்கக் காலச் சம்பவத்தை தூசி தட்டிக் கையிலெடுத்துக் கதறக் கதற இப்போது காட்சிகளாகக் காட்டி இருக்கிறது! அந்த வன்மம் தான், 'அந்தோணிசாமி' என்கிற அந்த உண்மையான உதவி ஆய்வாளரின் பெயரை மறைத்து, 'குருமூர்த்தி' என்று தங்களுக்குக் கசக்கிற ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறது! அந்த வன்மம் தான், நீதிமன்றத்தில், 'குருமூர்த்தி' என்று கதாபாத்திரத்தின் முழுப்பெயரைச் சொல்லாமல்,மூச்சுக்கு முப்பது முறை,குரு....குரு என்று உரக்கச்சொல்லி அந்தக் கதாபாத்திரதத்துக்கு எதிராக வாதிடுகிறது!
Recommended Video
வன்னியர் சங்க காலண்டர்
அந்த வன்மம் தான், தான் செய்த லாக்கப் கொலையை மறைக்க தன் வீட்டிலிருந்து அந்த உதவி ஆய்வாளர் உத்தரவிடும் போது, அவருக்குப் பின்புலமாக வன்னியர் சங்கச் சின்னம் பொறித்த காலண்டரை படம் பார்க்கின்ற பார்வையாளர்களுக்குத் தெளிவாகக் காட்டுகிறது! அந்த வன்மம் தான், சாத்தான்குளம், தளி, சிதம்பரம், வாச்சாத்தி போன்ற பல ஊர்களில் நடந்த,'நியாயங்களை' விட்டு விட்டு விழுப்புரத்தில் நடந்த ஒரு அநியாயத்தைக் கையில் எடுத்துத் திரைப்படமாக்கித் 'துட்டு' சம்பாதித்துக் கொண்டிருக்கிறது!
சூர்யாவின் ஜாதி அரசியல் பேச்சு
அந்த வன்மம் தான்,'அந்த உதவி ஆய்வாளர் உள்ளூரில் சாதிச் செல்வாக்கும்,அதிகாரமும்,பணபலமும் படைத்தவர்' என்று உயர் அதிகாரிகள் பாத்திரங்களிடையே வசனம் பேச வைக்கிறது! இங்கே இன்னொரு முதன்மையான செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும்! கொஞ்ச காலத்திற்கு முன்பு, இன்றைய, 'ஜெய்பீம்' நாயகன் இதே சூர்யா நடித்த 'சிங்கம்' என்ற ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில், 'டேய் என்னை யாருன்னு நெனச்சே? என் கார் மேல கையவச்சதுமே என் மாமன்,மச்சான்,சித்தப்பன்,பெரியப்பன் அப்படீன்னு சுத்துவட்டாரத்துல இருக்கிற ஆயிரக்கணக்கான ஜனங்க இங்க வந்து நிக்கறாங்களே பாத்தியா? இப்ப நான் ஒரு வார்த்தை சொன்னாப் போதும்..இப்பவே என் உறவுக் காரன் அத்தனைப் பேரும் சேர்ந்துகிட்டு உன்னை உண்டு இல்லைன்னு பீஸ் பீஸாக்கிடுவாங்க!' என்று, பெருங்குரலில் வெடித்து வில்லன் பிரகாஷ் ராஜ் முன்பாக வசனம் பேசுவார்! உறவுக் கூட்டம் என்று அவர் சொல்வது கதைப்படி அவரது ஜாதிக்காரக் கூட்டம்! ஓர் அரசாங்கத்தின் காவல் ஆய்வாளர் இப்படியா பேசுவார்? இப்படியான வெட்கங்கெட்ட ஜாதிப் பீற்றலுக்கு எதிராக எவருமே சினங்கொண்டு சீறிப் பாயவில்லையே ஏன்? இதையே பாதிக்கப்பட்டவர்கள் எங்காவது கூட்டங்களில் பேசிவிட்டால் அத்தனை வழக்குகளும் அவர்களின் மீது பாய்கின்றன! சகலவிதமான சுதந்திரங்களையும் ஒட்டுமொத்தமாகப் பெற்றிருக்கிறதா நமது தமிழ் சினிமா?
உண்மை இதுதான்..
இப்போது இந்தப் படத்தில், அதே சூர்யா அதே பிரகாஷ்ராஜ் அவர்களிடம், 'அந்த உதவி ஆய்வாளர் உள்ளூரில் சாதிச் செல்வாக்கும், அதிகாரபலமும்,பண பலமும் உடையவன்' என்று வசனம் பேசுகிறாரே.. இது எந்த ஊடக நியாயம்? ஒரு காவல்துறை அதிகாரியாக ஜாதிப்பெருமை பேசலாம்! ஆனால், ஒரு வழக்கறிஞராக ஜாதிக்கு எதிராகப் பேசவேண்டுமோ? என்ன கொடுமை 'சரவணா'இது? எழுதிக் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? இந்தப் படத்தில், லாக்கப்பில் ஓர் அப்பாவியைப் படுகொலை செய்கிற உதவி ஆய்வாளர், குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று வரையறை செய்து, மறைமுகமாக அதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்ற ஒரு அயோக்கியத்தனம், எதன் பொருட்டு வெளிப்படுத்தப் படுகிறது? மேலும், கடுகளவுகூட அது உண்மையும் அல்லவே! அந்தக் காலக் கட்டத்தில், அப்போது பாதிக்கப்பட்ட அந்த பழங்குடி மக்களுக்காக வாதாடியும், போராடியும் நீதியை நிலை நாட்டியவர்கள், இவர்கள் எந்தச் சமூகத்தை வன்முறைச் சமூகமாகச் சித்தரிக்கிறார்களோ, அந்தச் சமூகத்தின் வழக்கறிஞர்கள் தான் என்றுதானே இப்போது செய்திகள் வெளிவருகின்றன!
ராமதாஸின் மாநாடுகள்
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகப்பெருமளவில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குள் கொம்பு சீவிவிட்டு மோதல்களை உருவாக்கிக் குளிர் காய்கிற 'விஷமிகள்' பெருகி வருகிறார்கள்! இதுதான், நமது நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் பெருந்துயரம்! பின்தங்கிக் கிடக்கின்ற மக்களுக்குள் பிளவையும், பிரிவையும், பேதங்களையும் ஏற்படுத்திக் குளிர் காய்வதற்காக, எழுதுகோலையும் கேமராவையும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவர்கள் பயன்படுத்துவார்கள்? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதை உறுதி செய்து காட்டும் வகையில் மருத்துவர் அய்யா ச.இராமதாசு அவர்கள், தமிழ் நாட்டில் 120- ஊர்களில் 'ஒரு தாய் மக்கள் மாநாடு' நடத்தியதைப் பற்றியும், அவர்கள் அனைவரது வாழ்வுரிமைகளுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி அவற்றில் பெற்ற வெற்றிகளைப் பற்றியும் சில'ஞான' சூனியங்களுக்கு ஏதாவது தெரியுமா?ஒன்றை மட்டும் தெளிவு படுத்துகிறோம்! எச்சரிக்கையும் செய்கிறோம்! தர்மத்தின் வாழ்வுதனை, சில கேமராக்களும், சில எழுது கோல்களும், அவ்வப்போது 'கவ்வும்'! ஆனால், வெகுவிரைவில் வரலாற்றின் விசாரணையில், அவையனைத்தும் மண்ணைக் 'கவ்வும்'! இவ்வாறு கவிஞர் ஜெயபாஸ்கரன் பதிவு செய்துள்ளார்.