‛‛தவறை’‛ திருத்தி கொண்டேன்.. பிரதமர் மோடியை விமர்சித்ததை நினைத்து திடீரென்று வருந்திய நடிகை குஷ்பு
சென்னை: ‛‛நான் இதற்கு முன்பு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தேன். இப்போது தவறை திருத்தி கொண்டுள்ளேன். இதனால் எனது முந்தைய ட்விட்டர் பதிவை தேடி அதனை குறிப்பிட்டு விமர்சனம் செய்து யாரும் நேரத்தை வீணாக்க வேண்டாம்'' என காங்கிரஸ் கட்சியினருக்கு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து நடிகர்-நடிகைகள் அரசியல் கட்சியில் இணைந்து செயல்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் மிகவும் முக்கியமானவர் நடிகை குஷ்பு.
இவர் கடந்த 2010ம் ஆண்டில் திமுகவில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் அவரது பயணம் 2020ல் முடிவுக்கு வந்தது.

பாஜகவில் சேர்ந்த குஷ்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். தற்போது அவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்தேபோது பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக குஷ்பு விமர்சனம் செய்தார். தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருகிறார்.

காங்கிரஸை விமர்சித்த ராகுல்
சமீபத்தில் கூட காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையை நடிகை குஷ்பு விமர்சனம் செய்தார். அப்போது நடிகை குஷ்பு, ‛‛காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலராது. பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் எனக்கூறும் நபர்களுடன் ராகுல் காந்தி பேசி வருகிறார். பாரத் ஜோடோ யாத்திரை யின் ‛மேப்' முட்டாள்த்தனமாக இருப்பதாக அவரது கட்சிக்காரர்களே சொல்கின்றனர். காங்கிரஸ் கட்சி வளர இனி வாய்ப்பே இல்லை. அந்த கட்சி அனைத்தையும் இழந்துவிட்டது. ஜனநாயக ரீதியாக ஆளும் கட்சிக்கு ஒரு எதிர்க்கட்சி வேண்டும். ஆனால் ராகுல்காந்தி இருக்கும் வரை எங்களுக்கு எதிர்க்கட்சி இருக்காது'' என தெரிவித்து இருந்தார்.

ட்விட்டரில் குஷ்பு மெசேஜ்
இந்நிலையில் தான் நடிகை குஷ்புவை தற்போது சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததை தோண்டி எடுத்து அவரை தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு மெசெஜ் கூறியுள்ளார்.

தவறை திருத்தி கொண்டேன்
இதுதொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛காங்கிரஸ் கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. எனது ட்வீட்கள் அனைத்தும் நான் எழுதியவை தான். இதில் எதுவும் நீக்கப்படவில்லை. எனது முந்தைய கால ட்விட்டர் பதிவை தேடி எடுத்து யாரும் நேரத்தை வீணாக்க வேண்டாம். ஏனென்றால் நான் பிரதமரை அப்போது கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனால் தற்போது தவறை திருத்தி கொண்டேன். அதனால் கூலாக இருங்கள்'' என தன்மீதான விமர்சனத்துக்கு அவரே பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications