கிண்டி மருத்துவமனையில் மீண்டும் சர்ச்சை! மருத்துவர் இல்லாததால் இளைஞர் பலி! உறவினர்கள் போராட்டம்
சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் வயிற்று வலிக்காக சேர்க்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தும் விக்னேஷுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வராததால் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் அனுமதிக்கப்பட்டார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை பரிசோதனை செய்த அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், உடனே அட்மிட் செய்யுமாறு கூறியிருந்தனராம்.

இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் விக்னேஷை அனுமதித்தும் மருத்துவர்கள் யாரும் சிகிச்சை அளிக்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஏற்கெனவே புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது மற்றொரு இளைஞர் விக்னேஷ் (இவர் வேறு நபர்) என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன் தினம் சென்னை கிண்டி அரசு மருத்துவமனைக்கு வந்த இளைஞர், புற்றுநோய் துறையின் தலைவர் பாலாஜியிடம் அரை மணி நேரம் பேசியுள்ளதாக தெரிகிறது.
பிறகு புறநோயாளிகள் பிரிவின் மருத்துவர் அறையின் கதவை தாழிட்ட விக்னேஷ், அந்த மருத்துவரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கடுமையாக குத்தினார். இதனால் அதிக ரத்த போக்குடன் அந்த மருத்துவர் மயங்கினார். பிறகு கதவை திறந்துக் கொண்டு விக்னேஷ் வெளியே வந்தார். அவரை மருத்துவமனை காவலாளிகள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் விசாரணையில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்றும் அவருடைய தாய்க்கு புற்றுநோய் சிகிச்சை அளித்த பாலாஜியால் தான் தனது தாயின் உடல்நிலை மோசமடைந்து நுரையீரலும் பாதிக்கப்பட்டதாக விக்னேஷ் கருதியதாக தெரிகிறது. மேலும் டாக்டர் பாலாஜி, தங்களை மரியாதையாகவே நடத்தமாட்டார் என்றும், தனது உடலுக்கு என்ன என கேட்டாலும், "நீ டாக்டரா, நான் டாக்டரா" என கேட்டு முகத்திலேயே ஃபைலை வீசுவார் என விக்னேஷின் தாய் பிரேமா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே விக்னேஷுக்கும் இதய நோய், வலிப்பு நோய் இருப்பதாக அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கவலைத் தெரிவிக்கிறார்கள். பாலாஜியை கத்தியால் குத்தியதை அடுத்து தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி புறநோயாளி பிரிவு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் அவசர சிகிச்சை பிரிவுகள் எந்த தடையின்றி இயங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது எமர்ஜென்சியிலேயே மருத்துவர்கள் இல்லை என இறந்த விக்னேஷின் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications