கதிகலங்க வைத்த கோகுல்ராஜ் கொலை வழக்கு! வாட்ஸ் அப் ஆடியோ.. தேதி குறித்து சரண்டர்! யார் இந்த யுவராஜ்?
சென்னை : கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நேரில் ஆஜராகியுள்ள நிலையில், இந்த கொலை வழக்கின் முக்கிய நபரான யுவராஜ் யார், அவரது பின்னணி என்ன என்பது குறித்து பலரும் அறிய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரோடு கல்லூரியில் சக மாணவியாகப் பயின்று வந்தவர் ஸ்வாதி. இவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், இந்நிலையில் இருவரும் 23.6.2015-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருவரையும் மிரட்டி உள்ளார்.
கோகுல்ராஜ் கொலை..உங்களையே உங்களுக்கு தெரியலையா?..கேட்ட நீதிபதிகள்..கதறிய சுவாதிக்கு கடைசி வாய்ப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கு
பிறகு ஸ்வாதியை அனுப்பிவிட்டு கோகுல்ராஜை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார். மறுநாள் 24.6.2015-ம் தேதி கோகுல்ராஜ் பள்ளிப்பாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே டிராக்கில் சடலமாகக் கிடந்தார். இவ்வழக்கை நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆணவக் கொலையாகப் பதிவு செய்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. பிறகு மதுரைக்கு மாற்றப்பட்டு தற்போது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
யுவராஜ்
இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேரும் நீண்ட தலைமறைவிற்குப் பின் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கான சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
ஸ்வாதி
இதனைத் தொடர்ந்து நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட்.30-ஆம் தேதி விசாரணையும் தொடங்கியது. இந்த வழக்கில் கோகுல்ராஜின் காதலி ஸ்வாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு சாட்சிகள் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்றக் கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிறழ் சாட்சி
இதையடுத்து அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது கடந்த 2019 மே-5-ஆம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்புத் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கானது இறுதிக்கட்ட விசாரணையை எட்டியுள்ள நிலையில், கொலை வழக்கில் மிக முக்கியமான சாட்சியான சுவாதி கிழமை நீதிமன்றத்தில். பிறழ்சாட்ச்சியாக மாறியுள்ளார். கடந்த முறை ஆஜரான போது நீதிமன்றத்தில் குழப்பமான தகவல்களை கூறியதால் நீதிபதிகளின் கண்டனத்திற்கு ஆளானர்.
யார் இந்த யுவராஜ்?
இந்நிலையில் இவ்வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே முக்கிய நபராக குற்றம் சாட்டப்படும் யுவராஜ் என்றால் யார் அவரது பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம். கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளி என வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட யுவராஜ் சேலம் மஞ்சக்கல்பட்டியைச் சேர்ந்தவர் விவசாய தொழில் செய்து வந்தவர் தனியரசு நடத்தி வந்த கொங்கு இளைஞர் பேரவையில் சேர்ந்தார். பரபரப்பாக அரசியல் செய்து வந்த அவர் பல சர்ச்சைகளில் சிக்கி நிலையில் 2011 ஆம் ஆண்டு கொங்கு இளைஞர் பேரவையிலிருந்து விலகினார்.
அடுக்கடுக்கான புகார்
அதைத் தொடர்ந்து அடிதடி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக சங்ககிரி, கரூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் யுவராஜ் மீது வழக்குகள் உள்ளன. தொடர்ந்து வீரன் சின்னமலை கவுண்டர் பேரவையை ஆரம்பித்த அவர் நாமக்கல் திருச்செங்கோடு பகுதியில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக காதல் விவகாரங்களில் தலையிட்டு பெண் வீட்டாரிடம் கணிசமாக ஒரு தொகையை பெற்றுக் கொண்டதாகவும் பல புகார்கள் உள்ளன.
வாட்ஸ் அப் ஆடியோ
பல சிறு சிறு வழக்குகளில் யுவராஜ் ஈடுபட்டு வந்தாலும் கோகுல்ராஜ் கொலை வழக்கு தான் தமிழகம் முழுவதும் அவரது பெயரை கொண்டு சேர்த்தது. அர்த்தநாரீஸ்வரர் கோவில் கோகுல் ராஜை மிரட்டி அழைத்துச் சென்றதும் அதன் பின்னர் அவர் மரணம் அடைந்தது அனைவருக்கும் தெரிந்தது. இந்த கொலை வழக்கில் யுவராஜை தமிழக போலீசார் மிக தீவிரமாக தேடி வந்தனர். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அவ்வளவாக பிரபலமாகாத காலகட்டத்திலேயே ஆடியோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு போலீசாருக்கே தண்ணீர் காட்டினார். மேலும் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து தெரியாமல் போலீசார் திணறிக் கொண்டிருக்க சில தொலைக்காட்சிகளில் பேட்டியும் அளித்தார்.
பரபரப்பு
இது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. இதை அடுத்து தேதி குறித்து தான் போலீசில் ஆஜராக போகிறேன் என அதிரடி காட்டினார் யுவராஜ். அவர் சரணடைந்து விடக்கூடாது எப்படியும் கைது செய்ய வேண்டும் என போலீசார் தீவிரம் காட்டிய நிலையில் கைலி தொப்பி அணிந்து சாதாரணமாக இருசக்கர வாகனத்தில் போலீசாரை ஏமாற்றி சரண்டர் ஆனார் யுவராஜ். இப்படி கோகுல்ராஜ் கொலை வழக்கு நடந்த காலகட்டங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட யுவராஜ் குற்றம் சாட்டப்பட்ட கோகுல்ராஜ் வழக்கில் தான் தற்போது சுவாதி பிறழ் சாட்சியமாக மாறி இருக்கிறார்.
நீதிபதி குறித்து விமர்சனம்
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ், வழக்கு விசாரணையின் போது, நீதிபதியை அவதூறாக பேசியதாகவும் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோகுல்ராஜ் கொலை வழக்குடன் நீதிமன்ற அவதூறு வழக்கும், நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து யுவராஜ், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் இந்த வழக்கை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.